கொல்கத்தா பேட்டிங்
கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் டக் அவுட், அபிஜித் தோமர் 4 ரன்களுக்கு சரிந்த போதும், மீண்டு வந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்களும், நிதிஷ் ராணா 42 ரன்களும் அடித்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சாம் பில்லிங்ஸ் தனது பங்கிற்கு 36 ரன்களை அடித்துவிட்டு வெளியேறினர். இதனால் கடைசி 20 பந்துகளில் 61 ரன்கள் தேவைப்பட்டது.
த்ரில் வெற்றி
அப்போது வந்த இளம் வீரர் ரிங்கு சிங் 15 பந்துகளில் 40 ரன்களை சேர்த்தார். இதனால் கடைசி ஓவரில் 21 ரன்கள் தான் தேவை என்ற சூழல் உருவானது. இதிலும் முதல் 4 பந்துகளில் 4, 6, 6, 2 என 18 ரன்கள் சேர்ந்துவிட்டது. 2 பந்தில் 3 ரன்கள் தான் தேவை என்ற சூழலில் ரிங்கு சிங் அவுட்டானார். இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா பரிதாபமாக தோல்வியடைந்தது. தொடரில் இருந்தும் நாக் அவுட்டானது.
ஸ்ரேயாஸ் ஐயர் வேதனை
இந்நிலையில் இதுகுறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மனவேதனை அடைந்துள்ளார். அதில், நான் ஒன்றும் சோகமாக இல்லை. நான் ஆடிய சிறந்த போட்டிகளில் இதுவும் ஒன்று. ரிங்கு சிங் அணியை கடைசி வரை எடுத்துச் சென்றார் ஆனால் கடைசி 2 பந்துகள் சரியாக அமையவில்லை. முடித்துவிடுவார் என நினைத்தோம். துரதிஷ்டவசமாக நிறைவேறவில்லை.
பிட்ச் மாற்றம்
முதலில் நான் வரும்போது பிட்ச் ஈரப்பதம் இன்றி வறண்டு இருந்தது. எனவே ஸ்பின்னர்கள் ஆதிக்கம் இருக்கும் என நினைத்தேன். இதை எதிர்பார்க்கவில்லை. பவர் ப்ளேவில் இரண்டு விக்கெட்டுகள் சென்ற போதும் கூட ஒரு கை பார்த்துவிடலாம் என்று தான் நினைத்தோம். அதனால் தான் ஆட்டம் கடைசி வரை வந்துள்ளது.
மோசமான சீசன்
இந்தாண்டு எங்களுக்கு மோசமாக அமைந்துவிட்டது. சரியாக தொடங்கிய போதும், தொடர்ச்சியாக 5 தோல்விகள் வந்துவிட்டன. இதற்கு காரணம் ப்ளேயிங் 11ல் அதிகப்படியான மாற்றங்கள் செய்தது தான் என நினைக்கிறேன். வீரர்களின் ஃபிட்னஸ் மற்றும் காயங்கள் அதற்கு வழிவகுத்துவிட்டது என மனவருத்தத்துடன் கூறினார்.