கேஎல் ராகுல் மீது பிசிசிஐ நடவடிக்கை.. ரோகித்தை கண்டு கொள்ளாமல் விட்டதன் மர்மம்? ஒருதலைப்பட்ச முடிவு
மும்பை: ஐபிஎல் தொடரின் போது கேஎல் ராகுல் மீது நடவடிக்கை எடுத்த பிசிசிஐ, ரோகித் சர்மாவை கண்டுகொள்ளாமல் விட்டதாக புகார் எழுந்துள்ளது.
நேற்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை அணி, லக்னோ அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டம் மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது.
பிசிசிஐயின் விதிப்படி போட்டி 7 மணி முதல் 7.15 மணிக்குள் முடிந்திருக்க வேண்டும்.ஆனால் நேற்று போட்டி 7.30 மணிக்கு மேல் தான் முடிந்தது.

ரோகித் மீது புகார்
இதற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறியதால் ராகுலுக்கு 12 லட்சம் ரூபாயை பிசிசிஐ அபராதமாக விதித்தது. இதேபோல் மும்பை அணியும் தாமதமாக பந்துவீசியது. ஆனால் ரோகித் சர்மாவை கண்டுகொள்ளாமல் பிசிசிஐ விட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விதி என்ன?
அதற்கு காரணம் ரோகித் சர்மா ஏற்கனவே தாமதமாக பந்துவீசியதாக 2 முறை அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மூன்றாவது முறையும் அதே தவறை செய்தால், அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். நேற்று ரோகித் சர்மா மூன்றாவது முறையும் தவறு செய்ததாக கூறப்படுகிறது.

பின்னடைவு
இதனால் ரோகித் சர்மாவுக்கு தடை விதித்தால் அது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும், ஐபிஎல் வர்த்தகமும் குறையும் என்பதால் பிசிசிஐ கண்டுகொள்ளாமல் விட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஏனென்றால் மும்பையின் அடுத்த போட்டி சிஎஸ்கே உடன் நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் போது தான் டிஆர்பி அதிகமாகும்.அப்போது ரோகித் இல்லை என்றால், அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே Vs மும்பை
ஐபிஎல் தொடரின் எல்கிளாசிகோ எனப்படும் மும்பை, சிஎஸ்கே போட்டி வரும் வியாழக்கிழமை 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விரு அணிகளுக்கும் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பையின் கை தான் ஓங்கியுள்ளது. இந்த ஆட்டத்திற்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல் விளம்பரதாரர்களும் ஆர்வமுடன் காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications