
பூட்டான் வீரர்
இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்திற்கு 896 இந்திய வீரர்கள், 318 அயல்நாட்டு வீரர்கள் என மொத்தமாக 1,214 பேர் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இதில் முதல் முறையாக பூட்டானை சேர்ந்த மிக்யோ டோர்ஜி என்ற இளம் வீரர் இடம்பிடித்துள்ளார். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவர் இதுவரை 2 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் அவரின் திறமை ஐபிஎல் வரை கொண்டு வந்துள்ளது.

தோனியின் வாக்கு
எம்.எஸ்.தோனியின் ரசிகரான மிக்யோ டோர்ஜி , சமீபத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அப்போது தோனி, அனைத்தையும் எளிதாக பார். முடிவுகளை விட செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்து, அப்போது தானாக சிறந்த முடிவு கிடைக்கும். தலையில் அதிக அழுத்தத்தை ஏற்றிக்கொள்ளாதே, அனுபவித்து கிரிக்கெட் விளையாடு என அறிவுரை கூறியுள்ளார்.

பெருமை கொண்ட பூட்டான்
தோனியின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட மிக்யோ, நேரடியாக ஐபிஎல் தொடரில் கலந்துக்கொள்ள வந்துவிட்டார். இதுகுறித்து பேசிய அவர், ஐபிஎல்-ல் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. ஏல பட்டியலில் எனது பெயரை பார்த்தவுடன் எனது ஊர்மக்கள் அனைவரும் தொடர்பு கொண்டு வாழ்த்துக் கூறுகின்றனர். பூட்டானுக்கே பெருமையாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

குறிவைக்கும் சிஎஸ்கே
ஹர்திக் பாண்ட்யாவை போன்ற வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டருக்கு ஐபிஎல் தொடரிலும், இந்திய அணியிலும் அதிக வரவேற்புகள் உள்ளன. சமீபத்தில் வெங்கடேஷ் ஐயர் குறைந்த காலக்கட்டத்தில் இந்திய அணி வரை முன்னேறினார். எனவே மிக்யோவுக்காகவும் மெகா ஏலத்தில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் திறமையை தோனி அறிந்திருந்தால், சிஎஸ்கே அணியே இவரை ஏலம் எடுக்க முயலும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











