அகமதாபாத்: ஐபிஎல் குவாலிபையர் 2 ஆட்டத்தில் பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர் மெக்காய், தனது சோகத்தை மறைத்து கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருக்கிறார்.
பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில், மெக்காய் சிறப்பாக பந்துவீசியதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினே பாராட்டு தெரிவித்து இருந்தார்.
நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசிய மெக்காய், 23 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதுமட்டுமல்லாமல் மேக்ஸ்வெல் அடித்த பந்தை டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார். இவ்வளவு ஸ்பெஷல் ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக்காய் வாழ்க்கையில் அவ்வளவு பெரிய சோகம் நிலவி வருகிறது. இது குறித்து பேசிய ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் சங்ககாரா, மெக்காயின் தாய் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால் அத்தனை சோகத்துக்கும், கவலைக்கும் நடுவில் நேற்று கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக அவர் பாராட்டினார். இதற்கு மெக்காய் நன்றி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஐபிஎல் தொட்ரின் இறுதிப் போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் மெக்காய் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார்.
ஆட்டம் முடிந்ததும் மெக்காய், உடனடியாக தனது தாயை பார்க்க வெஸ்ட் இண்டீஸ் திரும்புகிறார். இந்த செய்தி அறிந்ததும் ரசிகர்கள் மெக்காயின் தாய்க்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். 25 வயதான மெக்காய், 2 சர்வதேச ஒருநாள் போட்டியிலும், 13 சர்வதேச டி20 போட்டியிலும் விளையாடி இருக்கிறார்.