
லக்னோ அணி சொதப்பல்
அந்த அணியின் ஓப்பனிங் வீரர் குயிண்டன் டிக்காக் 46 ரன்களும், தீபக் ஹூடா 34 ரன்களும் அடித்தனர். மற்ற எந்த வீரருமே பெரியளவில் சோபிக்கவில்லை. கேப்டன் ராகுல் 6, க்ருணால் பாண்ட்யா 7, ஸ்டோய்னிஸ் 1 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்களை குவித்தது.

சுவாரஸ்ய சம்பவம்
இந்நிலையில் லக்னோ இன்னிங்ஸின் போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஆட்டத்தின் 13வது ஓவரை சந்தீப் ஷர்மா வீச, குயிண்டன் டிக்காக் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அப்போது 4வது பந்தை டி காக் அடித்த பந்து எட்ஜாகி கீப்பர் ஜிதேஷ் ஷர்மாவின் கைகளுக்குள் சென்றது. இதற்கு பவுலர் மற்றும் கீப்பர் மிக உறுதியாக அவுட் எனக்கூறினர்.

நடுவர் தீர்ப்பு
ஆனால் அதனை எதையுமே ஏற்காத நடுவர், டிக்காக்கிற்கு நாட் அவுட் என்ற முடிவை தான் கொடுத்தார். எனினும், தான் அவுட்தான் என்பதை தெரிந்த டிக்காக், நியாயமாக நடந்துக்கொள்ளும் வகையில் திடீரென களத்தில் இருந்து வெளியேறினார். இதனை கண்டு நடுவர்கள் மட்டுமின்றி எதிரணி வீரர்களுமே வியந்து பார்த்தனர்.

ரசிகர்கள் பாராட்டு
37 பந்துகளை சந்தித்திருந்த டிக்காக் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 46 ரன்களை அடித்தார். அவர் நிலைத்து நின்றிருந்தால் ஸ்கோரை உயர்த்திருக்கலாம். ஆனால் உண்மையான ஸ்போர்ட்ஸ்மென்ஷிப் என்றால் இன்று டிக்காக் செய்த விஷயம் தான் என இணையத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். டிக்காக் வெளியேறிய போது, அவருக்காக மைதானத்தில் இருந்து பார்வையாளர்கள் எழுந்து நின்று கை தட்ட ஆரம்பித்தார்கள்.


Click it and Unblock the Notifications