
ஆர்சிபி கேப்டன்
குறிப்பாக விராட் கோலி இடம்பெற்றுள்ள ஆர்சிபி அணியின் ஏலம் தனி கவனம் ஈர்த்துள்ளது. ஏனென்றால் அந்த அணியின் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியதால் புதிய கேப்டனை தேடி வருகின்றனர். அணியில் தற்போதைக்கு கோலி, க்ளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகியோரை தக்கவைத்துள்ளதால் சீனியர் வீரர்களையும் சரியாக கையாண்டு கேப்டன்சி செய்யும் வகையில் ஒரு வீரர் தேவைப்படுகிறார்.

கேப்டன்சி தேர்வுகள்
மெகா ஏலத்தில் தற்போதைக்கு கேப்டன்சிக்காக ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் முதன்மை தேர்வுகளாக பார்க்கப்படுகின்றனர். இதில் இருந்து யாரேனும் ஒருவரை தான் ஆர்சிபி கேப்டனாக நியமிக்கவுள்ளது எனக்கூறப்பட்டு வந்தது.

ஆர்சிபி இறுதி முடிவு
இந்நிலையில் ஆர்சிபி தற்போது தனது இறுதி முடிவை எடுத்துள்ளது. அதன்படி இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமித்து ஏலம் எடுக்க ஒருமனதாக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ரூ. 20 கோடியை தனியாக ஒதுக்கி வைத்துள்ளதாகவும் அணி நிர்வாகத்திடம் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

உறுதி செய்த வல்லுநர்
ஐபிஎல் நிலவரங்கள் குறித்து நன்கு அறிந்த, முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆர்சிபி அணி ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமிக்க முடிவெடுத்துவிட்டது. இதற்காக பெரும் தொகையை ஒதுக்கிவிட்டனர். இந்த முறை அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக ஸ்ரேயாஸ் தான் இருப்பார் எனக்கூறியுள்ளார்.

ஏன் வார்னர் இல்லை
முன்னதாக இந்த பட்டியலில் டேவிட் வார்னர் தான் முதன்மை தேர்வாக இருந்தார். ஆனால் டேவிட் வார்னருக்கு தற்போது வயது 35 ஆகிவிட்டது. அடுத்த சில வருடங்களுக்கு மெகா ஏலமும் என்பது நடைபெறாது எனத்தெரிகிறது. எனவே ஆர்சிபியின் எதிர்காலத்தையும் மனதில் வைத்து 27 வயதாகும் ஸ்ரேயாஸ் ஐயரை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











