
சிஎஸ்கே இன்னிங்ஸ்
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்களை குவித்தது. இதன் பின்னர் களமிறங்கிய சென்னை அணியால் சரியான வேகத்தில் ரன் அடிக்க முடியவில்லை. ருதுராஜ் கெயிக்வாட் டக் அவுட், மிட்செல் சாண்ட்னர் 11, ஷிவம் தூபே 13, ஜடேஜா 3 என சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். உத்தப்பா 30 ரன்கள், அம்பத்தி ராயுடு 40 மட்டும் பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டனர்.

தோனி அதிரடி
இதனால் சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. உனத்கட் வீசிய இந்த ஓவரில் முதல் பந்திலேயே பிரிட்டோரியஸ் அவுட்டானார். 2வது பந்தில் டுவைன் பிராவோ சிங்கிள் அடிக்க ஸ்ட்ரைக்கிற்கு தோனி வந்தார். கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் தோனி 6, 4, 2, 4 என அடுத்தடுத்து அதிரடி காட்டி த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார். வெற்றி பெற வேண்டிய போட்டியில் மும்பை மீண்டும் தோல்வியடைந்தது.

காரணம் என்ன
இந்நிலையில் ரோகித் தெரிந்தே செய்த ஒரு தவறு தான் மும்பையை தோற்கடித்துள்ளது. அதாவது அனுபவமில்லாத கேப்டன் கூட, தோனி ஸ்ட்ரைக்கில் இருக்கும் போது உனத்கட்டிற்கு பவுலிங் தரமாட்டார். இதற்கு காரணம் கடந்த காலங்களில் உள்ள ரெக்கார்ட் தான். இதற்கு முன்னரும் உனத்கட்டிற்கு எதிராக தோனி கடைசி ஓவரில் காட்டடி அடித்துள்ளார்.

2019ம் ஆண்டு சம்பவம்
கடந்த 2019ம் ஆண்டு ராஜஸ்தான் vs சிஎஸ்கே போட்டியில், உனத்கட் கடைசி ஓவரை வீசினார். இக்கட்டான சூழலில் சிஎஸ்கே அணி இருக்க, தோனி கடைசி ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு, அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தார். இதன் மூலம் அன்றே தோனிக்கும் - உனத்கட்டிற்கும் சரிவராது என்பது வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.

கடைசி ஓவர் ரெக்கார்ட்
இதுவரை தோனிக்கு எதிராக கடைசி ஓவரில் 11 பந்துகளை உனத்கட் வீசியுள்ளார். இதில் மட்டும் தோனி 47 ரன்களை விளாசியுள்ளார். உனத்கட்டிற்கு எதிராக தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 427.30 ஆகும். உனத்கட் அழுத்தமான சூழல்களில் சொதப்புகிறார் என்று தெரிந்தும் கேப்டனாக ரோகித் சர்மா தவறு செய்துவிட்டார். அவரே மும்பை தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











