
தொடக்க வீரர்கள்
புவனேஸ்வர் குமார் வீசிய 2வது பந்திலேயே உத்தப்பா எட்ஜ் வாங்கினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக பந்து ஸ்லிப் ஃபில்டரிடம் பிடிப்படாமல் பவுண்டரிக்கு சென்றது. இதே போன்று யான் வீசிய 2வது ஓவரில் ருத்துராஜ் அழகாக கவர் டிரைவ் செய்து பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு
உத்தப்பா அதிரடியாக ஆடியதால் வாசிங்டன் சுந்தரை பந்துவீச வில்லியம்சன் அழைத்தார். அப்போது பெரிய ஷாட் ஆட முற்பட்டு முதல் பந்திலேயே உத்தப்பா அவுட் ஆனார். இதன் பின்னர் ருத்துராஜ் 15 ரன்கள் எடுத்திருந்த போது நடராஜன் பந்துவீச வந்தார். வழக்கம் போல் முதல் பந்திலேயே நடராஜன் வீசிய யாக்கரில் ஸ்டம்புகள் சிதற ருத்துராஜ் ஆட்டமிழந்தார்.

மொயின் அலி அதிரடி
இதன் பின்னர் சிஎஸ்கே அணிக்கு சரிவு ஏற்பட்டது. அப்போது களத்துக்கு வந்த மொயின் அலி, ராயுடு ஜோடி அதிரடியை காட்டியது. இதனால் சிஎஸ்கேவின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. இந்தப் போட்டியின் போது ராயுடு ஐபிஎல் வரலாற்றில் 4 ஆயிரம் ரன்கள் கடந்தார். ராயுடு 27 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தோனி ஏமாற்றம்
மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மொயின் அலி, 48 ரன்களில் மார்க்ரம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிவம் துபே 3 ரன்களில் ஆட்டமிழக்க, ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் களமிறங்கிய தோனியும் ரன் அடிக்க திணறினார். தோனியும் 3 ரன்களில் அவுட்டானார்.இறுதியில் ஜடேஜா 15 பந்துகளில் 23 ரன்கள் விளாச, 20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. தமிழக வீரர்கள் சுந்தர், நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.


Click it and Unblock the Notifications











