புனே: ஐபிஎல் தொடரின் 49வது லீக் ஆட்டத்தில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த ஆட்டத்திலும் பிராவோ இல்லை. மிட்செல் சாட்ணருக்கு பதிலாக மொயின் அலி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.
பெங்களூரு அணியின் தொடக்க வீரராக கோலி, டுபிளஸிஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி மிகவும் ஆபத்தானது என்பதால் விக்கெட்டை வீழ்த்தும் முனைப்புடன் சிஎஸ்கே விரர்கள் களமிறங்கினர்.
சிஎஸ்கே வீரர் முகேஷ் சௌத்ரி இன் ஸ்விங் யாக்கர் லெங்த் பந்தை வீச முயற்சித்தார். ஆனால் நினைத்ததை விட கொஞ்சம் தள்ளி முகேஷ் வீச, அதனை Fine leg திசைக்கு அடித்து விராட் கோலி பவுண்டரியை பதிவு செய்தார். இதே போன்று அடுத்த பந்தை கோலி அடித்த போது அது முகேஷ் சௌத்ரியிடம் சிக்கியது.

ஆனால், கோலி கொஞ்சம் இறங்கி வந்துவிட்டார். இதனால் அவரை ரன் அவுட்டாக்கும் விதமாக முகேஷ் சௌத்ரி பந்தை ஸ்டம்ப் நோக்கி வீச அது கோலியின் காலில் பலமாக பட்டது. அச்சச்சோ தப்பு பண்ணிட்டோமே என பயந்த முகேஷ் சௌத்ரி உடனடியாக கையை உயர்த்தி மன்னிப்பு கேட்டார்.
இதுவே பழைய கோலியாக இருந்திருந்தால் வாயிலிருந்து வார்த்தைகளை மாலையாக வழங்கி இருப்பார். ஆனால் கோலி யாரும் எதிர்பாராத வகையில் கட்டை விரலை உயர்த்தி பரவாயில்லை என சிரித்தார். இதனால் முகேஷ் சௌத்ரியும் கொஞ்சம் மன அமைதி அடைந்தார். விராட் கோலியின் இந்த செயல் ரசிகர்களை கவர்ந்தது.