இமாலய இலக்கு
தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ முதல் பந்து முதலே அதிரடி காட்டினார். 29 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 66 ரன்களை விளாசினார். இதன் பின்னர் வந்த வீரர்கள் சொதப்பிய போதும் லியாம் லிவிங்ஸ்டன் தூண் போன்று நிலைத்து ரன் குவித்தார். 42 பந்துகளில் அவர் 70 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்களை குவித்தது.
|
கோலியின் நம்பிக்கை
இதன்பின்னர் வந்த ஆர்சிபி அணியில் விராட் கோலி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றார் போலவே முதல் பந்து முதலே பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடித்து நம்பிக்கையுடன் ஆடினார். இதனால் இன்று விராட் கோலியின் அரைசதத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
கோலி விக்கெட்
ஆனால் திடீரென அதிர்ச்சி காத்திருந்தது. ரபாடா வீசிய 3வது ஓவரில் விராட் கோலி 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷார்ட் லெந்த் பந்தை விராட் கோலி கட் ஷாட் ஆட முயன்றார். ஆனால் பந்து ராகுல் சஹாரிடம் கேட்ச் சென்றது. இதற்கு களத்தில் இருந்த நடுவர் நாட் அவுட் கொடுத்தார். எனினும் அதனை எதிர்த்து பஞ்சாப் அணி DRS எடுத்தது.
3வது நடுவரின் முடிவு
பந்து பேட்டில் படவில்லை என்ற காரணத்திற்காக நாட் அவுட் கொடுத்திருந்தனர். ஆனால் 3வது நடுவர் ரிவ்யூவ் செய்து பார்த்த போது, பந்து பேட்டில் எட்ஜானது தெரியவந்தது. இதனால் அவுட் என மாற்றி கொடுக்கப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் விராட் கோலியின் துரதிஷ்டவசத்தை நினைத்து மனம் வருந்தினர்.
கோலி செய்த விஷயம்
இந்நிலையில் அவுட்டால் கடும் ஆத்திரமடைந்த விராட் கோலி, கைகளை தூக்கி வானத்தை பார்த்த அவர், கடவுளிடம் தனது அதிருப்தியை கூறினார். அதில் " இதற்கு மேல் நான் என்னதான் செய்ய வேண்டும் என நீ நினைக்கிறாய், என்னை சோதிக்கிறாயே" என மனம் கலங்கி கூறினார். இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.