
கடைசி ஓவர்
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரர் டி காக் 80 ரன்கள் விளாச, மற்ற வீரர்கள் முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்தனர். ஆடுகளமும் தொய்வாக இருந்தததால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இருப்பினும் 19வது ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டதால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது.

பதோனி ஸ்பெஷல்
முதல் பந்திலேயே தீபக் ஹூடா ஆட்டமிழக்க, அடுத்த பந்து ரன் போகவில்லை. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. எனினும் மூன்றாவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்து பதோனி, காற்றில் கையால் குத்தி மகிழ்ச்சியை காட்டினார். மேலும் கடைசி பந்தில் சிக்ஸருக்கு விரட்ட, பதோனி துள்ளி குதித்தார். அமைதியாக காணப்பட்ட பதோனி, ஏன் டெல்லிக்கு எதிராக இப்படி துள்ளி குதித்தார் தெரியுமா?

ஏமாற்றிய டெல்லி
பதோனி டெல்லியை சேர்ந்தவர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி அணி இவரை எடுப்பதாக நம்பிக்கை அளித்து ஏலத்தில் ஏமாற்றியுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் கூட பதோனியை மூன்று முறை சோதனை பயிற்சிக்கு டெல்லி அணி அழைத்துள்ளது. அதில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டும் ஏதோ சில காரணங்களால் அவரை டெல்லி அணி எடுக்கவில்லை.

திருப்பி கொடுத்தார்
அவ்வளவு ஏன், மெகா ஏலத்துக்கு முன்பு கூட டெல்லி அணி நடத்திய பயிற்சி சோதனையில் பதோனி 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். அப்போதும் அவரை டெல்லி அணி எடுக்கவில்லை. இந்த ஆத்திரத்தில் தான் நேற்று டெல்லி அணியிடம் பவுண்டரி மற்றும் சிக்சர் விளாசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வட்டியும், முதலுமாக பதோனி திருப்பி கொடுத்தார்.


Click it and Unblock the Notifications