ஐதராபாத்: நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் ஆடியுள்ள டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதல் சிக்சரை விளாசி மோசமான சாதனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் ஐதராபாத் - டெல்லி அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. ஐதராபாத் அணி சார்பாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

சொந்த மண்ணிலேயே ஐதராபாத் அணி தோல்வியை சந்தித்தது அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறனுக்கும், ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் டெல்லி அணியின் டேவிட் வார்னர், ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுத்ததாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்கேற்றாற் போல் டேவிட் வார்னர் களமிறங்கிய போது, ரசிகர்கள் அதிகளவில் கரகோஷம் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
அதுமட்டுமல்லாமல் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் முக்கிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய டேவிட் வார்னர் 285 ரன்களை குவித்துள்ளார். என்னதான் மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி இருந்தாலும், ஆரஞ்ச் கேப் பட்டியலில் தொடர்ந்து முதல் மூன்று இடங்களில் நீடித்து வந்தார். ஆனால் டேவிட் வார்னர் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் இருந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தக் குறையை ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் போக்கியுள்ளார். வாஷிங்டன் சுந்தர் வீசிய 4வது ஓவரில் டேவிட் வார்னர் சிக்சர் விளாசி அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சிக்சர்களே அடிக்காமல் 290 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நடப்பு சீசனில் டெல்லி அணி, பவர் பிளே ஓவர்களில் ஒரு சிக்சரை கூட அடிக்காமல் இருந்தது. அந்த மோசமான சாதனையையும் டெல்லி அணி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.