டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நாளை வாழ்வா சாவா என்ற கட்டத்தில் சிஎஸ்கே அணி டெல்லி அணியுடன் பலப்பரிட்சை நடத்துகிறது. பிளே ஆப் சுற்றுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மொத்தமாகவே குஜராத் மட்டும்தான் தற்போது தகுதி பெற்றிருக்கிறது.
இரண்டாவது இடத்தில் உள்ள சிஎஸ்கேவும் மூன்றாவது இடத்தில் உள்ள லக்னோவும் 15 புள்ளிகள் உடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் நாளைய ஆட்டம் சிஎஸ்கேவுக்கும் லக்னோவுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

காரணம் நாளை ஆட்டத்தில் டெல்லியை சிஎஸ்கே அணி வீழ்த்தினால் அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடுவார்கள். ஒருவேளை தோல்வியை தழுவினால் மும்பை பெங்களூர் அணிகள் தங்களது கடைசி ஆட்டத்தில் தோற்றால் மட்டுமே சிஎஸ்கே வால் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். கடந்த முறை சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லியை 27 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வீழ்த்தி இருக்கிறது.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி விசேஷ உடை ஒன்றை அணிய உள்ளது. அதாவது இந்த சீசனில் பல அணிகளும் ஏதேனும் ஒரு போட்டியில் விசேஷ ஜெர்சியை அணிந்து விளையாடுகிறார்கள். அந்த வகையில் டெல்லி அணி ரெயின்போ கலர் பொருந்திய ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளனர்.

இந்த நிலையில் எப்போதெல்லாம் டெல்லி அணி ரெயின்போ ஜெர்சி அணிந்து இருக்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதுவரை மூன்று முறை அவர்கள் ரெயின்போ ஜெர்சியை அணிந்திருக்கிறார்கள்.
இதில் முதல் முறை பெங்களூரு அணியையும், இரண்டாவது முறை மும்பை அணியும் ,மூன்றாவது முறை கேகேஆர் அணியையும் அவர்கள் வீழ்த்தி இருக்கிறார்கள். இதனால் நாளைய ஆட்டத்தில் ரெயின்போ ஜெர்சி லக்கு தொடருமா தங்களுடைய திறமையால் அந்த லக்கை சிஎஸ்கே அணி உடைப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.