பெங்களூரு: சென்னை அணியின் இளம் வீரர் சிவம் துபேவின் வீக்னெஸ் பற்றி கேப்டன் எம்எஸ் தோனி பேசியுள்ளார். அதேபோல் சிவம் துபேவின் திறமை மீது நம்பிக்கை உள்ளதாக கூறிய தோனி, அவருக்கான திட்டங்களை பற்றியும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய ஆர்சிபி அணி 2018 ரன்கள் மட்டுமே எடுத்து, 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்தப் போட்டியில் சென்னை அணியின் இளம் வீரர் சிவம் துபே அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 52 ரன்களை விளாசினார். பெங்களூரு சின்னசாமி மைதானம், அளவில் சிறியது என்றாலும் 5 இமாலய சிக்சர்களை அடித்து அசரடித்தார். அதில் ஒரு சிக்சர் 111 மீட்டர் தூரம் வரை சென்றது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. சிவம் துபே மீது அதிகளவில் விமர்சனங்கள் வந்தாலும், நேற்றைய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சிஎஸ்கே கேப்டன் தோனி, சிவம் துபேவின் பேட்டிங்கில் உள்ள பிரச்சனைகளை பொதுவெளியில் போட்டு உடைத்துள்ளார். வெற்றிக்கு பின் எம்எஸ் தோனி பேசுகையில், சிறப்பாக சிக்சர்கள் அடிக்கக் கூடிய வீரர்களில் சிவம் துபேவும் ஒருவர். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிவம் துபே பேட்டிங் செய்ய கஷ்டப்படுகிறார். ஆனால் ஸ்பின்னர்களை பொளந்து விடுகிறார். ஐபிஎல் தொடருக்கு முன் சிஎஸ்கே பயிற்சி முகாமில் சிவம் துபேவுக்கு என்று பிரத்யேக திட்டம் வைத்திருந்தோம்.
ஆனால் சிவம் துபே பயிற்சி முகாமிற்கு வந்த போது காயமடைந்துவிட்டார். அதனால் அவருக்கான திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. என்னை பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டில் மிடில் ஓவர்களில் அதிரடியாக ரன்கள் சேர்ப்பது மிகவும் அவசியம். அந்த வேலையை சிறப்பாக சிவம் துபேவால் செய்ய முடியும். அதேபோல் சிவம் துபேவுக்கு திறமை இருக்கிறது என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். அந்த திறமை மீது அவரும் நம்பிக்கை வைக்க வேண்டும்.
ஆனால் நாங்கள் எல்லாவற்றையும் பவுண்டரி லைனுக்கு இந்தப் பக்கத்தில் இருந்துதான் சொல்ல முடியும். பவுண்டரி லைனுக்கு அந்தப் பக்கம் களமிறங்கிய பின், களம் அவருக்கானது. அந்த களத்தில் அவர்தான் எதிர்நீச்சல் போட்டு மீண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார். சிவம் துபேவை குரூப்பில் டூப் என்று வர்ணனையில் ஈடுபட்டவர்களே கலாய்த்து வந்த நிலையில், அவர் மீது தோனி நம்பிக்கை வைத்து பேசியது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.