பெங்களூரு: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை 6 ரன்களில் வீழ்த்தி இம்பேக்ட் பிளேயராக வந்த ஆகாஷ் சிங் முதல் ஓவரிலேயே வீழ்த்தி அசத்தியுள்ளார்.

16வது ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளஸிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய சென்னை அணி, 20 ஓவர்களில் 226 ரன்கள் குவித்தது. சென்னை அணி சார்பாக கான்வே 83 ரன்களும், ஷிவம் துபே 52 ரன்களும் சேர்த்தனர். சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் ஒட்டுமொத்தமாக 17 சிக்சர்களை விளாசினர்.

இதனால் சென்னை அணி நிர்ணயித்த இமாலய இலக்கை ஆர்சிபி அணி விரட்டுமா என்ற கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கு பதிலளிக்க டூ பிளஸிஸ் - விராட் கோலி இணை களமிறங்கியது. சென்னை அணி சார்பாக இம்பேக் பிளேயராக ராயுடுவுக்கு பதிலாக ஆகாஷ் சிங் களமிறக்கப்பட்டார். தொடர்ந்து தோனி ஆகாஷ் சிங்கையே முதல் ஓவரை வீசுவதற்கு அழைத்தார்.

முதல் பந்தை எதிர்கொண்ட விராட் கோலி 2 ரன்களும், 2வது பந்தில் பவுண்டரியும் அடிக்க சின்னசாமி மைதானம் ஒரே குரலில் ஆர்சிபி என்று கோஷம் எழுப்பியது. இதனைத் தொடர்ந்து ஆகாஷ் சிங் வீசிய 4வது பந்து விராட் கோலி பேட்டில் அடித்து காலில் பட்டு இறுதியாக ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதன் காரணமாக ஆர்சிபி அணி ரசிகர்களின் நம்பிக்கை ஒட்டுமொத்தமாக சிதைந்தது. இந்த ஆட்டத்தை நேரில் பார்த்த மனைவி அனுஷ்கா சர்மா சீட்டில் இருந்து எழுந்து அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.