பெங்களூரு: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தொடக்க வீரர் டெவோன் கான்வே 32 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியுள்ளது. சின்னசாமி மைதானத்தில் தொடங்கியுள்ள போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் சென்னை அணி சார்பாக ருதுராஜ் கெய்க்வாட் - டெவோன் கான்வே தொடக்கம் கொடுத்தனர். அதில் ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ரஹானே - கான்வே இணை முதல் சில ஓவர்கள் நிதானம் காட்டியது.

பின்னர் 4வது ஓவர் முதல் அதிரடியை தொடங்கிய நிலையில், இளம் வீரர் விஜய்குமார் பந்துவீச்சில் ரஹானே ஒரு இமாலய சிக்சரை விளாசினார். தொடர்ந்து பார்னல் வீசிய 6வது ஓவரில் ரஹானே அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகள் விளாசினார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் சென்னை அணி 53 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து சுழல் பந்துவீச்சாளர்களை ஆர்சிபி அணி அட்டாக்கில் கொண்டு வந்தது. மேக்ஸ்வெல் பந்தில் கான்வே சிக்சர் அடித்து வரவேற்க, இன்னொரு முக்கிய பந்துவீச்சாளரான ஹசரங்காவுக்கும் அதேபோன்ற வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரஹானே 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதேபோல் ஓவரில் கான்வே அரைசதம் அடித்து அசத்தினார். சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அரைசதம் அடித்திருந்த நிலையில், இந்தப் போட்டியில் மீண்டும் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தொடக்கம் முதலே கான்வே அதிரடியாக ஆடினார். ரஹானே ஆட்டமிழந்த போது ஆர்சிபி ரசிகர்களின் கரகோஷம் விண்ணை தொட்ட நிலையில், அந்த சத்தத்தை கான்வே அரைசதம் மூலம் அடக்கினார்.