சென்னை: இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துகளுக்கு சென்னை அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் திணறி வரும் சூழலில், ஐதராபாத் அணியின் மார்கோ யான்சன், நடராஜன் என இரு முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் விளையாட உள்ளது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாட உள்ளது. இதுவரை இந்த இரு அணிகளும் 18 முறை நேருக்கு நேர் மோதி இருக்கிறார்கள். இதில் சென்னை அணி 13 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐந்து முறையும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் சிஎஸ்கே அணி நான்கு முறையும் ஹைதராபாத் ஒரு முறையும் வென்றிருக்கிறது.

இதனால் சென்னை அணியின் ஆதிக்கம் தொடரும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஐதராபாத் அணி முன்னெப்போதும் இல்லாத வகையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அதீத பலத்துடன் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இரு முக்கிய இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை ஐதராபாத் அணி தன்னிடத்தில் வைத்துள்ளது. மார்கோ யான்சன் மற்றும் நடராஜன் இருவரும் சர்வதேச பேட்ஸ்மேன்களையே தங்களது பந்துவீச்சின் மூலம் திணற வைக்கக் கூடியவர்கள்.
இந்த நிலையில் சென்னை அணியின் இளம் வீரரும், நம்பிக்கை நட்சத்திரமுமான ருதுராஜ் கெய்க்வாட் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிகமாக திணறி வருகிறார். இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் போல்ட்-க்கு எதிராக மட்டும் ருதுராஜ் கெய்க்வாட் 3 முறை ஆட்டமிழந்துள்ளார். அதேபோல் இடதுகை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் ஓவருக்கு 7 ரன்கள் மட்டுமே சேர்ப்பதோடு, ஒவ்வொரு 18 பந்துகளுக்கும் ஒருமுறை ஆட்டமிழந்திருக்கிறார்.
இதனால் இடதுகை பந்துவீச்சாளர் யுக்தியை ருதுராஜ் கெய்க்வாட்-க்கு எதிராக ஐதராபாத் அணி கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மார்கோ யான்சன் மற்றும் நடராஜன் ஆகியோரை எதிர்கொள்ள ருதுராஜ் கெய்க்வாட், முன்னெச்சரிக்கையாக வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் சிறப்பாக ஆடிய ருதுராஜ், கடந்த இரு போட்டிகளில் சொதப்பி இருந்தார். இதனால் இன்றையப் போட்டியிலாவது ருதுராஜ் ஃபார்முக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.