டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அதிரடி வீரர் ரஸ்ஸல் பேட்டிங் செய்த போது சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 117 கி.மீ. வேகத்தில் ஒரு பந்தை வீசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
16வது ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டியில் டெல்லி - கொல்கத்தா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 127 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 43 ரன்களும், ரஸ்ஸல் 38 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி அணி, 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியது. 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்ற நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

டெல்லி அணியின் வெற்றிக்கு அந்த அணியின் பந்துவீச்சாளர்களே முக்கிய காரணமாக அமைந்தனர். 717 நாட்களுக்கு பின் ஐபிஎல் தொடரில் களமிறங்கிய இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அதேபோல் நார்கியே, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் காரணமாகவே கொல்கத்தா அணியின் ரன் குவிப்பை டெல்லி அணியால் விரைந்து கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.
இந்த நிலையில் நேற்றையப் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், 19வது ஓவரின் போது 117 கி.மீ. வேகத்தில் ஒரு பந்தை வீசியுள்ளது தெரிய வந்துள்ளது. வழக்கமாக சுழற்பந்துவீச்சாளர்கள் 100 கி.மீ. வேகத்திற்குள்ளாகவே பந்துவீசுவார்கள். வேகத்தை விடவும் பிளைட் மற்றும் சுழலில் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். க்ருனால் பாண்டியா போன்ற சில பந்துவீச்சாளர்கள் மட்டுமே ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனில் பந்துவீச வேகத்தையும் ஒரு ஆயுதமாக வைத்திருப்பார்கள்.
க்ருனால் பாண்டியா கூட 105 கி.மீ. வேகத்திற்கு மேல் பந்துவீசியதில்லை. ஆனால் குல்தீப் யாதவ் மிதவேகப்பந்துவீச்சாளர் போல் 117 கி.மீ. வேகத்தில் பந்துவீசியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குல்தீப் யாதவ் வீசிய பந்து விரைந்து வருவதை கண்டு ரஸ்ஸல் ஒரு நொடி மிரண்டே போய்விட்டார். மும்பை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கரே 120 கி.மீ. வேகத்தில் இதுவரை சரியாக பந்துவீசவில்லை. ஆனால் சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் 117 கி.மீ. வேகத்தில் வீசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.