ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் நடக்கும் போட்டி என்பதால் மைதானத்தில் பிங்க் நிற ஜெர்சியை அதிகம் பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் மைதானத்தில் அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் நிறமே நிறைந்துள்ளதாக ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அதிர்ச்சி கொடுத்தது. இதனால் ஜெய்ப்பூரில் நடக்கும் போட்டியில் சென்னை அணி அடைந்த தோல்விக்கு ஜெய்ப்பூரில் பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் பேசுகையில், ஜெய்ப்பூர் பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்யவே விரும்புகிறோம். எங்கள் பலம் என்னவோ, அதற்கேற்ப விளையாட விரும்புகிறோம். எங்களின் பலம் டிஃபெண்ட் செய்வது தான். ராஜஸ்தான் அணியின் 200வது போட்டியில் விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல் ராஜஸ்தான் அணிக்காக 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன்.
இன்றைய ஆட்டத்தின் போது மைதானத்தில் அதிகமாக பிங்க் நிற ஜெர்சியை பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் ஜெர்சியில் ரசிகர்கள் கடல் போல் சூழ்ந்திருக்கிறார்கள். இதற்கான காரணம் என்னவென்று எனக்கு நன்றாக தெரியும். ராஜஸ்தான் அணியில் காயம் காரணமாக போல்ட் மட்டும் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஆடம் சாம்பா சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

ஏற்கனவே சென்னை அணி விளையாடிய மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா மைதானங்களில் சிஎஸ்கே ரசிகர்கள் கூடி இருந்தனர். சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் கடைசி சீசன் என்று கருதப்படுவதால், அவருக்கு ஃபேர்வெல் கொடுக்கும் வகையில் எதிரணி ரசிகர்கள் கூட சென்னை அணியின் ஜெர்சியை அணிந்து வருகின்றனர். இன்றைய ஆட்டத்திலும் சென்னை ரசிகர்கள் மைதானத்தை சூழ்ந்துள்ளது தோனி ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.