
ஸ்ரேயாஸின் காயம்
கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்தி வந்தார். ஆனால் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரின் போது திடீரென அவருக்கு முதுகுவலி ஏற்பட்டது. ஏற்கனவே ஏற்பட்ட காயத்தின் தாக்கம் இன்னும் இருப்பதால் ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளும் அவர் மீண்டும் விளையாடுவதற்கு 4 - 5 மாதங்கள் வரை ஆகலாம். எனவே புதிய கேப்டனை நியமிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

பெரும் பின்னடைவு
இந்த சூழலில் அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா அணியின் முக்கியமான பவுலர்களின் ஒருவர் நியூசிலாந்தின் லாக்கி ஃபெர்கியூசன். 150+ வேகத்தில் அசால்ட்டாக வீசக்கூடிய இவருக்கு திடீரென தசைப்பிடிப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இலங்கையுடனான தொடரின் போது இந்த சம்பவம் நடந்தது. இதனால் ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிகளுக்கு ஃபெர்கியூசன் இருக்க மாட்டார் எனத்தெரிகிறது.

ராணாவுக்கும் காயம்
இதே போல தற்போது நட்சத்திர வீரர் நிதிஷ் ராணாவும் காலை வாரிவிட்டுள்ளார். ஐபிஎல் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஒரு த்ரோ டவுனில் ராணாவின் இடதுகையில் காயம் ஏற்பட்டு மைதானத்தை விட்டு வெளியேறிவிட்டார். இதற்கு மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர். அறுவை சிகிச்சை அளவிற்கு செல்லாது என்ற போதிலும், காயம் குணமடைய சிறிது நாட்கள் ஆகும்.

2 வீரர்கள் வரவில்லை
காயங்கள் தான் பிரச்சினை என்று பார்த்தால் இரண்டு வீரர்களால் நேரத்திற்கு வரவே முடியாது. வங்கதேசத்தை சேர்ந்த முன்னணி வீரர்களான சகிப் அல் ஹசன் மற்றும் லிண்டன் தாஸ் ஆகியோர் தொடக்கத்திலேயே கே.கே.ஆர்- உடன் சேருவதாக இருந்தது. ஆனால் கடிஅசி நேரத்தில் அவர்களுக்கு அந்நாட்டு வாரியம் அனுமதி கொடுக்காததால் முதல் சில போட்டிகளை தவறவிடுவார்கள்.


Click it and Unblock the Notifications











