ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. ஐதராபாத் அணி சார்பாக மார்கோ யான்சன் மற்றும் நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஐபிஎல் தொடரில் 47வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் டேவிட் வீசா நீக்கப்பட்டு ஜேசன் ராய் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் வழக்கம் போல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய் 20 ரன்களில் வெளியேற, கொல்கத்தா அணி 4.4 ஓவர்களில் 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இந்த நிலையில் கேப்டன் நிதிஷ் ராணா - ரிங்கு சிங் இணை சேர்ந்தது. தொடக்கம் முதலே ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி அடிக்க ராணா அதிரடியாக ஆடினார். இதனால் கொல்கத்தா அணி 9 ஓவர்கள் முடிவில் 73 ரன்கள் சேர்த்தது. இந்த நிலையில் கார்த்திக் தியாகி வீசிய 10வது ஓவரில் ராணா இரு சிக்சர்கள், ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார்.
இதனால் நிதிஷ் ராணா பெரிய இன்னிங்ஸை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 42 ரன்கள் எடுத்து எய்டம் மார்க்ரமின் அபார கேட்சால் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ரஸ்ஸல் சிக்சருடன் தொடங்கினார். இருப்பினும் மார்க்கண்டே சுழலில் சிக்கி 24 ரன்களில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி சிக்கலில் சிக்கியது. பின்னர் வந்த நரைன் 1 ரன்னிலும், ஷர்துல் தாக்கூர் 8 ரன்களிலும் ஆட்டமிழக்க, 18 ஓவர்களில் கொல்கத்தா அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இருப்பினும் களத்தில் ரிங்கு சிங் இருந்ததால் நிச்சயம் பெரிய இலக்கை கொல்கத்தா அணி நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் 19வது ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசி, 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஆனால் நடராஜன் வீசிய கடைசி ஓவரில் நடராஜன் வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ரிங்கு சிங் விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.