டெல்லி: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கு மிடில் ஓவர்களில் அதிக விக்கெட்டை கொடுத்ததே காரணமாக அமைந்துவிட்டதாக டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா மற்றும் கிளாஸன் ஆகியோர் அரைசதம் விளாசினார். டெல்லி அணியின் மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி சொந்த ம்னண்ணில் அடைந்த தோல்விக்கு டெல்லி அணிக்கு பதிலடி கொடுத்துள்ளது. அதேபோல் புள்ளிப்பட்டியலிலும் மும்பை அணியை பின்னுக்கு தள்ளி 8வது இடத்திற்கு ஐதராபாத் அணி முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில், 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைவது வேதனையாக உள்ளது. நாங்கள் பந்துவீசிய போது மிட்செல் மார்ஷ் மிடில் ஓவர்களை அற்புதமாக வீசினார். ஐதராபாத் அணியின் பந்துவீச்சின் போது வேகத்தை குறைத்தார்கள். அது அவர்களுக்கு சாதகமாக மாறியது. டி20 கிரிக்கெட்டில் இரு வீரர்களுக்கு ஒரே நேரத்தில் சிறந்த தொடக்கம் கிடைக்கும் போது, ஒருவர் கடைசி வரை ஆட்டத்தை எடுத்து சென்றிருக்க வேண்டும்.
ஆனால் மிடில் ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அதேபோல் பார்ட்னர்ஷிப்களையும் உருவாக்கவில்லை. அக்சர் படேல் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். டெல்லி அணியில் நானும் அவரும் மட்டுமே இடதுகை பேட்ஸ்மேன்கள். அதனால் அக்சர் படேலை ஃபினிஷிங்கிற்கு பயன்படுத்தி வருகிறோம். இனி அவரை முன்னதாக களமிறக்குவது குறித்து சிந்திக்க வேண்டும்.
மிடில் ஓவர்களில் ஒரு வீரர் தொடர்ந்து விளையாடுவதை உறுதி செய்ய வேண்டும். மிடில் ஓவர்களில் விக்கெட்டை இழப்பதுதான் எங்களுக்கு தொடர்ந்து பிரச்சனையாகி வருகிறது. சீனியர் வீரர்கள் பொறுப்பேற்று முன் வர வேண்டும். ஒரேயொரு வீரர் பெரிய ஸ்கோரை எடுத்தால், ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிவித்தார்.