
ஐபிஎல் மினி ஏலம்
எம்.எஸ்.தோனி, ரெய்னா போன்ற வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் சிஎஸ்கேவில் நிலைத்து நின்ற போதும், தமிழகத்தை சேர்ந்த யாருமே நிலைக்கவில்லை. அஸ்வின், முரளி விஜய், பத்ரிநாத், அபினவ் முகுந்த் போன்றோர் சில காலம் ஆடிவிட்டு கழட்டிவிடப்பட்டனர். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக சிஎஸ்கேவில் தமிழக வீரர்களின் பங்கேற்பு குறைந்துக்கொண்டே வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு 8 ஆக இருந்த எண்ணிக்கை 2022ம் ஆண்டு சீசனில் 2 என குறைந்தது.

பரிதாப நிலை
கடந்த சீசனில் ஆடிய ஹரி நிஷாந்த் மற்றும் என்.ஜகதீசன் ஆகிய இருவரும் கழட்டிவிடப்பட்டுள்ளனர். தற்போது அணியில் ஒரு தமிழக வீரர் கூட இல்லாததால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் பெரும்பாலும் சென்னையில் போட்டிகள் நடைபெறும் என்பதால் உள்ளூர் வீரர்கள் இல்லாதது ரிஸ்க்கான முடிவாகும். எனவே நிச்சயம் 3 தமிழக வீரர்களுக்கு குறிவைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் விவரம் குறித்து பார்க்கலாம்.

தமிழக வீரர்களுக்கான இடம்
ஐபிஎல் ஏலத்திற்காக பிசிசிஐ இறுதி செய்துள்ள 405 வீரர்களில் தமிழகத்தில் இருந்து 16 பேர் இடம்பெற்றுள்ளனர். ரூ.20.45 கோடியை கையில் வைத்துள்ள சென்னை அணி இன்னும் 7 வீரர்களை தேர்வு செய்யும். தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பிங் செய்யும் பேட்ஸ்மேனும் தேவை, அதே சமயம் அம்பத்தி ராயுடுவுக்கு பிறகு மிடில் ஆர்டரில் ஆடும் வீரரும் தேவை என்ற சூழல் உள்ளது.

அடுத்த விக்கெட் கீப்பர்
அந்தவகையில் என்.ஜகதீசனுக்கு மீண்டும் குறிவைக்கும். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவரை கடந்தாண்டு குறைந்த விலைக்கு சிஎஸ்கே வாங்கியிருந்தது. ஆனால் சமீபத்தில் அவர் உள்நாட்டு தொடரில் காட்டிய அதிரடி ஆட்டத்தால் பல அணிகளும் போட்டிப்போடும். இதனால் மீண்டும் குறைந்த தொகைக்கு கிடைப்பது கடினம். அவருக்கு மாற்றாக பாபா இந்திரஜித்திற்கு சிஎஸ்கே குறிவைக்கும். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஐபிஎல்-ல் அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது.

ஸ்பின்னர் தேவை
பேட்டிங் மற்றும் வேகப்பந்துவீச்சில் ஓரளவிற்கு செட்டிலாகியுள்ள சிஎஸ்கே, சுழற்பந்துவீச்சுக்காக உள்ளூர் வீரரை தேர்வு செய்யலாம். அதற்காக டார்கெட் செய்யப்பட்டுள்ளவர் சஞ்சய் யாதவ். இடதுகை ஸ்பின்னரான சஞ்சய் கடந்தாண்டு மும்பை அணியால் வாங்கப்பட்டிருந்தார். எனினும் அவருக்கு சென்னை அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











