அகமதாபாத்: 2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி இன்று விளையாடவுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. 2 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்ற லீக் போட்டிகளுக்கு பின், பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை அணிகள் முன்னேறின. இதில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் தோல்வியடைந்த வெளியேற, இறுதிப்போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் மோதவுள்ளன.

சென்னையை அணியை பொறுத்தவரை ருதுராஜ் - கான்வே இணை சிறப்பான தொடக்கத்தை அளித்து வருகிறது. நடப்பு சீசனில் கான்வே 625 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 564 ரன்களும் விளாசியுள்ளனர். அதேபோல் பவர் பிளேவில் விக்கெட் விழுந்தால் வெளுக்க ரஹானே, ஸ்பின்னர்களை பொளக்க சிவம் துபே, ரன்ரேட் குறைந்தால் ராயுடு, ஃபினிஷிங் செய்ய மொயின் அலி மற்றும் ஜடேஜா என்று சென்னை அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது.
அதேபோல் ஜடேஜா, மொயின் அலி மற்றும் தீக்சனா என்று சுழலும், பதிராணா, தீபக் சஹர் மற்றும் தேஷ்பாண்டே என்று வேகமும் சரிசமமான நிலையில் உள்ளன. மொயின் அலியின் பந்துவீச்சு மட்டும் ஆடுகளத்திற்கு ஏற்ப முடிவு செய்யப்படுகிறது. இதனால் சென்னை அணியை பொறுத்தவரை எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. ஆனால் களத்தில் குஜராத் அணியை சர்ப்ரைஸ் செய்ய தோனி புதிய திட்டத்துடன் நிச்சயம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
இன்னொரு பக்கம் குஜராத் அணியின் சுப்மன் கில் அசாத்திய ஃபார்மில் இருக்கிறார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சுப்மன் கில், விஜய் சங்கர், சாய் சுதர்சன் ஆகியோரின் பேட்டிங்கால் மட்டுமே குஜராத் அணி தப்பித்து வருகிறது. சாஹா, ஹர்திக் பாண்டியா, மில்லர் உள்ளிட்டோர் நடப்பு சீசனில் சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக ஆடியுள்ளனர். இதனால் சுப்மன் கில்லை வீழ்த்தினால், குஜராத் அணியின் பேட்டிங் சீட்டுக்கட்டு போல் சரிந்தாலும் ஆச்சரியமில்லை.
ஆனால் அந்த அணியின் பந்துவீச்சு எந்த அணியையும் சவாலுக்குள்ளாக்கும். பர்பிள் கேப் ரேஸில் முகமது ஷமி, ரஷித் கான் மற்றும் மோகித் சர்மா ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் சொந்த மைதானத்தில் களமிறங்குவதால் குஜராத் அணிக்கு கூடுதல் சாதகம் ஏற்பட்டுள்ளது. ரசிகர்களின் ஆதரவு இரு அணிகளுக்கு சமமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நடப்பு சாம்பியன் குஜராத் மீண்டும் கோப்பையை வெல்லுமா அல்லது நான்கு முறை சாம்பியன் சென்னை அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் அடுத்த சீசனில் எம்எஸ் தோனி விளையாடினாலும் கேப்டனாக களமிறங்க அதிக வாய்ப்புகள் இல்லை என்றே பார்க்கப்படுகிறது. இதனால் கேப்டனாக எம்எஸ் தோனி விளையாடவுள்ள கடைசி ஐபிஎல் ஃபைனல் என்பதால், சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது.