ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 203 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை, சும்மா லெஃப்ட், ரைட்டு என்று ஜெய்ஷ்வால் அடித்து நொறுக்கினார். இதனால், ஜெய்ப்பூரின் ஸ்கோர் தங்க விலை போல் எகிறியது. ஜெய்ஷ்வர்ல், பட்லர் ஜோடி 26 பந்துகளில் எல்லாம் 50 ரன்களை தொட்டது. இந்த ஜோடியை பிரிக்க தோனி எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

பவர்பிளே முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து தோனி சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து ஆட்டத்தை நகர்த்தினார். பட்லர், ஜடேஜா ஓவரில் 27 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய ஜெய்ஷ்வால் 26 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
இந்த நிலையில், ஆட்டத்தின் 13வது ஓவரில் தேஷ்பாண்டே அபாரமாக பந்துவீசி ஜெய்ஷ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் விக்கெட்டுகளை ஓரே ஓவரில் வீழ்த்த, ராஜஸ்தான் அணியின் ரன் குவிக்கும் வேகத்தில் தொய்வு ஏற்பட்டது. ஷிம்ரன் ஹேட்மயர் 8 ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் ஜூரல் 15 பந்தில் 34 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.இதே போல், ராஜஸ்தான் அணி ஐபிஎல் தொடரில் இதுவரை 200 ரன்களுக்கு மேல் அடித்து, ஒரு முறை கூட தோற்றது இல்லை எஎன்பது குறிப்பிடத்தக்கது.