ஜெய்ப்பூர்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 26 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணி சார்பாக பட்லர் - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. சென்னை அணி சார்பாக ஆகாஷ் சிங் முதல் ஓவரை வீசினார்.

ஆட்டத்தின் முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசி ஜெய்ஸ்வால் அசத்தினார். அந்த ஓவரில் மட்டும் மூன்று பவுண்டரிகள் விளாசப்பட்டது. இதனைத் தொடர்ந்து துஷார் தேஷ்பாண்டே ஓவரிலும் பவுண்டரிகளை அடித்து ஜெய்ஸ்வால் அசத்தினார். பின்னர் 3வது ஓவரில் மட்டுமே 3 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்து ஜெய்ஸ்வால் ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் 5 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 54 ஆக உயர்ந்தது.
பின்னர் பவர் பிளேவின் கடைசி ஓவரில் பட்லரும் அதிரடி காட்ட, ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 64ஆக உயர்ந்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் ஜடேஜா பந்துவீச்சில் சிக்சரை விளாசி 26 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதுவரை 6 அரைசதங்கள் அடித்துள்ள ஜெய்ஸ்வால், சென்னை அணிக்கு எதிராக மட்டும் 3வது அரைசதத்தை இன்று அடித்தார்.
இதனால் சென்னை அணிக்கு எதிராக சிறப்பாக ஆடும் வீரர்களில் ஷிகர் தவான், பொல்லார்ட் ஆகியோரை தொடர்ந்து ஜெய்ஸ்வால் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். தொடக்கம் முதலே ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி வருவதால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்து வருகிறது. இவரை கட்டுப்படுத்த முடியாமல் சென்னை அணி பவுலர்கள் திணறி வருகின்றனர்.