பெங்களூரு: சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் அனைத்து பந்துவீச்சாளர்களின் எகானமியும் 10க்கு மேல் சென்ற நிலையில், சிராஜ் மட்டும் 7.5 எகானமியில் பந்துவீசியுள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறது.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து சேஸிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தது.

ஒட்டுமொத்தமாக இந்தப் போட்டியில் 33 சிக்சர்கள் விளாசப்பட்டுள்ளது. 200 ரன்களுக்கு மேல் குவித்தாலும், சின்னசாமி மைதானத்தில் அவ்வளவு எளிதாக எந்த அணியாக இருந்தாலும் வெற்றிபெறுவது எளிதல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக உள்ள சின்னசாமி மைதானம், பவுலர்களுக்கு எமனாக உள்ளது.
இந்தப் போட்டியில் பந்துவீசிய அனைத்து பந்துவீச்சாளர்களின் எகானமியும் குறைந்தது 10ஆக இருந்தது. ஆனால் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் சிராஜ் மட்டும் 4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 7.5 எகானமியில் பந்துவீசியுள்ளார். சிராஜின் திறமை ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்பட்டுள்ளது. இவருக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் சின்னசாமி மைதானத்தில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள சிராஜ், மொத்தமாக 16 ஓவர்களை வீசியுள்ளார். அதில் 96 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பவர் பிளே ஓவர்களில் மட்டும் 4 போட்டிகளில் மொத்தமாக 50 டாட் பந்துகளை வீசியுள்ளார். சிராஜின் பந்துவீச்சை ஆர்சிபி அணியின் ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.