சென்னை : ஐபிஎல் 16வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டு களித்து புதிய ரெக்கார்டை படைத்திருக்கிறது. இதில் கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டதால் ஆட்டம் சூடு பிடித்தது.
இதன் காரணமாக ஃபீல்டர்களை நிறுத்தவும், பந்துவீச்சாளர்களுடன் ஆலோசனை செய்தும் போட்டியை சஞ்சு சாம்சன் தாமதப்படுத்தினார்.
மேலும் பந்துவீச்சாளர் சந்தீப் ஷர்மா களத்தில் தன்னுடைய யுத்தியை மாற்றி கடைசி மூன்று பந்துகளை தோனிக்கு இடதுபுறத்தில் இருந்து ஓடி வந்து வீசினார்.

இதன் மூலம் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ஓவரை வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் சஞ்சு சாம்சனுக்கு தற்போது ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. 20 ஓவரை strategic டைம் அவுட் போக 90 நிமிடங்களுக்குள் போட்டு இருக்க வேண்டும்.ஆனால் தோனி நேற்று ஏற்படுத்திய நெருக்கடியால் தான் சஞ்சு சாம்சன் நேற்று இந்த தவறை செய்தார்.
இதனால் ஆட்டம் கொஞ்சம் தாமதமாக முடிவடைந்தது. இதனால் தற்போது சஞ்சு சாம்சனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் முதல்முறையாக இந்த தவறு செய்திருக்கிறார். மூன்று முறை சஞ்சு சாம்சன் இந்த தவறை செய்தால் குறைந்தபட்சம் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 6 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. ஏற்கனவே கடந்த போட்டியில் பெங்களூரு அணி கேப்டன் டுப்ளசிஸ் ஓவர் ஐ மெதுவாக வீசியதற்காக அபராதம் பெற்றார். 2008 ஆம் ஆண்டு பிறகு ராஜஸ்தான் அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. இரு அணிகளும் கடைசியாக 7 முறை மோதிய நிலையில் சிஎஸ்கே அணி ஒரு முறை மட்டுமே வென்றிருக்கிறது.