ஜெய்ப்பூர்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் அபாரமான ஃபார்மில் உள்ள ரஹானே மற்றும் ராயுடுவை வீழ்த்தி ராஜஸ்தான் அணியின் அஸ்வின் அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் பலனாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் விளாசியுள்ளது. முதல்முறையாக ஜெய்ப்பூர் மைதானத்தில் 200 ரன்களை எட்டி ராஜஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி தொடக்கம் முதலே ரன்கள் சேர்க்க முடியாமல் திணறியது. அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணி தரப்பில் ஆடம் ஷாம்பா, சாஹல் மற்றும் அஸ்வினை வைத்து மும்முனை தாக்குதலை நடத்தியது. இதன் காரணமாக தொடக்க வீரர் கான்வே 16 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ரஹானே - ருதுராஜ் இணை நிதான ஆட்டத்தை ஆடியது.
9 ஓவர்களுக்கு பின் அட்டாக் செய்ய முயன்று ருதுராஜ் கெய்க்வாய் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த சூழலில், சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 72 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் சென்னை அணி அதிரடிக்கு கியரை மாற்ற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. இதன்பின்னர் 11வது ஓவரை வீச அஸ்வின் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் அதிரடியான ஃபார்மில் உள்ள ரஹானே 15 ரன்களிலும், இம்பேக்ட் பிளேயராக வந்த ராயுடு ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
அந்த ஓவரில் வெறும் ஒரு ரன் மட்டுமே கொடுத்து அஸ்வின் இரு முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து, ஆட்டத்தையே ராஜஸ்தான் அணி பக்கம் திருப்பினார். இறுதியாக 4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த முறை சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒவ்வொரு முறையும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் வெறித்தனமாய் விளையாடி வருவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.