ஐதராபாத்: நடப்பு ஐபிஎல் தொடரில் 7வது புதிய தொடக்க வீரர்கள் கூட்டணியை கொல்கத்தா அணி களமிறக்கியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி மோசமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 6 தோல்விகளையும், 3 வெற்றிகளையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் புதிய தொடக்க ஜோடியாக ஜேசன் ராய் - குர்பாஸ் இணை களமிறங்கியது. வழக்கம் போல் இன்றையப் போட்டியிலும் கொல்கத்தா தொடக்க ஜோடி ஏமாற்றத்தையே அளித்தது. குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமலும், ஜேசன் ராய் 20 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடக்க வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் பவர் பிளே ஓவர்களில் ரன்களை குவிக்க முடியாமல் கொல்கத்தா அணி திணறி வருகிறது. பவர் பிளே ஓவர்களில் ரன்கள் குவிக்க முடியாததே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் நடப்பு சீசனில் மட்டும் 7 முறை தொடக்க வீரர்களை மாற்றியுள்ளது கொல்கத்தா அணி நிர்வாகம். குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஜேசன் ராய், ஜெகதீசன், சுனில் நரைன், மன்தீப் சிங் என்று கொல்கத்தா அணி நிர்வாகம் வீரர்களை களமிறக்கியுள்ளது.
கடந்த ஆண்டு முதல் கணக்கிட்டு பார்த்தால், கொல்கத்தா அணி 13 முறை தொடக்க வீரர்களில் மாற்றம் செய்துள்ளது. சென்னை, மும்பை, ஆர்சிபி, குஜராத், லக்னோ உள்ளிட்ட அணிகள் வெற்றிகரமாக செயல்படுவதற்கு தொடக்க வீரர்களை மாற்றாததே மறைமுக காரணம். ஆனால் கொல்கத்தா அணி நிர்வாகம் தொடக்க வீரராக களமிறங்குவது யார் என்று மியூசிக்கல் சேர் விளையாடுவது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.