ஜெய்ப்பூர்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர் பதிரானா வீசிய யார்க்கர் பந்துகளில் பவுண்டரிகளை விளாசி ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் துருவ் ஜுரெல் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் குட்டி மலிங்கா என்ற அழைக்கப்படும் பதிரானா வீசிய யார்க்கர்களை ஜாம்பவான் வீரர்களையும் திரும்பி வைத்துள்ளது. பதிரானா பந்துவீச்சை எதிர்கொண்ட படிக்கலால் ஒரு பந்தை கூட சரியாக கணித்து விளையாட முடியவில்லை. மணிக்கு 150கிமீ வேகத்தில் வரும் பந்தை தடுக்க முடியாமல் படிக்கல் திணறினார்.

ஆனால் எந்த பயமும் இல்லாமல் நின்றிருந்த இளம் வீரர் துருவ் ஜுரெல் அசாத்தியமாக சிக்சர்களை விளாசி மிரட்டிவிட்டார் என்றே சொல்லலாம். உலகத்தரம் வாய்ந்த ஃபினிஷரான தோனி முன்னால் நின்றுகொண்டு பதிரானா பந்தில் சிக்சர் அடித்தது பலரையும் வியக்க வைத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணியின் இளம் ஃபினிஷராக உருவெடுத்துள்ளார் துருவ் ஜுரெல்.
ஒவ்வொரு போட்டியிலும் குறைவான பந்துகளை எதிர்கொண்டாலும், கிடைக்கும் பந்துகளில் எல்லாம் சிக்சர்களை விளாசுகிறார் ஜுரெல். அதில் ஒரே திசை என்று இல்லாமல், அனைத்து திசைகளிலும் சிக்சர் விளாசுவது தான் இவரின் சிறப்பாக அமைந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் வீரரான ஜுரெலின் தந்தை கார்கில் போரில் பங்கேற்ற ராணுவ வீரரின் மகன்.
சிறுவயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய துருவ் ஜுரெல், படிப்படியாக உயர்ந்து இந்திய யு19 அணியில் இடம்பிடித்தார். அதுமட்டுமல்லாமல் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக இந்திய யு19 அணி, முத்தரப்பு தொடரில் பங்கேற்றது. அந்தத் தொடரில் ஜுரெலின் விக்கெட்ட் கீப்பிங்கும் பேட்டிங்கும் பலரையும் வியக்க வைத்தது. இதனால் இந்திய யு19 அணிக்கு கேப்டனாக இருந்த ப்ரியன் கார்க்-க்கு உதவியாக ஜுரெல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அப்போதே ஜுரெல் மீது பலரும் கண் வைத்திருந்தனர். அதன் பின் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்திய ஜுரெல், 11 முதல்தர போட்டிகளில் விளையாஅடி 587 ரன்களை விளாசினார். அதில் 3 அரைசதங்களும், ஒரு சதங்களும் அடங்கும். இதையடுத்து கடந்த ஐபிஎல் ஏலத்தில் துருவ் ஜுரெலை ராஜஸ்தான் அணி அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு வாங்கியது. கடந்த சீசனில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், நடப்பு சீசனில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையால் ஜுரெல் களமிறக்கப்பட்டார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஹெட்மயரை முன்னால் வைத்து கொண்டு தன் வித்தையை காட்ட, ஐபிஎல் உலகமே மிரண்டு போனது. கண்மூடி திறப்பதற்கு பஞ்சாப் அணியை பஞ்சு பஞ்சாக மாற்றிவிட்டார் என்றே சொல்லலாம். இருப்பினும் ரியான் பராக்கின் சீனியாரிட்டியால் ராஜஸ்தான் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்தது. ஆனால் கடந்த இரு போட்டிகளில் ரியான் பராக்கை வெளியில் வைத்து, ஜுரெலை அணிக்குல் கொண்டு வந்ததற்கான பலனை ராஜஸ்தான் அணி அனுபவித்து வருகிறது.
நேற்றையப் போட்டியில் தனது மானசீக குருவான தோனி முன்பாக ஜுரெல் ஆடிய விதம் பலரையும் பிரமிக்க வைத்தது. இந்தப் போட்டிக்கு பின், தோனியுடன் ஒரே மைதானத்தில் ஆடியதே என் மகிழ்ச்சி. தோனிக்கு முன் நின்று விளையாடுவதும், அவர் என் பேட்டிங்கை பார்த்ததே சந்தோஷம் என்று தெரிவித்துள்ளார். இறுதியாக தோனி வாயில் இருந்து ஜுரெலை பாராட்டி வார்த்தைகள் வந்ததுதான் அன்றைய நாளினை அவருக்கு முழுமையாக்கியுள்ளது.