பெங்களூரு: டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தி இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளர் வைஷக் விஜய்குமார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதேபோல் அதிரடியாக ஆடி வந்த அக்சர் படேல் மற்றும் லலித் யாதவ் ஆகியோரையும் வீழ்த்தி அறிமுகப் போட்டியிலே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வைஷக் விஜய்குமார் அசத்தியுள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபி அணி சார்பாக டேவிட் வில்லி மற்றும் கரண் சர்மா நீக்கப்பட்டு ஹசரங்கா மற்றும் வைஷக் விஜய்குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதனால் ஆர்சிபி அணியில் இடம்பிடித்த இளம் வீரர் வைஷக் விஜய்குமார் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி அணியின் பவுலிங்கில் 6வது ஓவரை வீசிய வைஷக் விஜய்குமார், அதிரடியாக ஆடி வந்த டேவிட் வார்னரை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அக்சர் படேல் மற்றும் லலித் யாதவ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல் முதல் ஓவரிலேயே நல்ல ஸ்விங்கும், வேகமும் தன்னிடத்தில் உள்ளது என்பதை விஜய்குமார் அனைவருக்கும் நிரூபித்துள்ளார். இவர் காயமடைந்த அனுஜ் ராவத்திற்கு பதில் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டவர்.
கர்நாடகா ரஞ்சி அணிக்காக ஆடும் வைஷக் விஜய்குமார் தான், தற்போது ஆர்சிபி அணி க்காக அறிமுகமாகியுள்ளார். இதுவரை 14 முதல்தர டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள விஜய்குமார், 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல் எகானமி ரேட்டும் 6.92 மட்டுமே வைத்துள்ளார். குறிப்பாக நடராஜனை போல் டெத் ஓவர்கள் வீசுவதில் வல்லவர் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் கூறியுள்ளனர். அதேபோல் சையத் முஷ்டாக் தொடரில் கர்நாடகா அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.
இதனால் ஆர்சிபி அணிக்கு முக்கியமான வீரராக வைஷக் விஜய்குமார் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் மணிக்கு 140 கிமீ வேகத்தை குறைக்காமல் பந்துவீசும் திறன் கொண்டவர் விஜய்குமார் என்பதால், ஆர்சிபி நிர்வாகம் பேட்ஸ்மேனுக்கு பதிலாக பந்துவீச்சாளரை ஒப்பந்தம் செய்துள்ளது. ஆர்சிபி அணி சிராஜ் தவிர்த்து வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களை நம்பியுள்ள சூழலில், இந்திய உள்ளூர் வீரர் சிறப்பாக அறிமுகம் கண்டுள்ளது அந்த அணியின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.