சென்னை : சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் 17 வயதேயான இலங்கையை சேர்ந்த குகதாஸ் மதுலன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. இதற்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இளம் வீரர்களை தயார்ப்படுத்த இந்த பயிற்சி முகாம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் பதிரனா வங்கதேச தொடரின் போது காயமடைந்தார். இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பதிரனா, ஐபிஎல் தொடரின் முதல் 2 வாரங்களுக்கான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதுவரை பதிரனா பவுலிங் பயிற்சியை தொடங்கவில்லை என்பதால், சிஎஸ்கே அணி நிர்வாகம் மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறது.
ஏற்கனவே சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் கான்வே காயத்தால் விலகியுள்ள நிலையில், நட்சத்திர வீரரான பதிரனாவின் காயம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் 17 வயதேயான இலங்கையின் ஜாஃப்னாவை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் இணைந்துள்ளார்.

ஜாஃப்னாவில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியின் போட்டியின் போது மலிங்காவின் பவுலிங் ஸ்டைலில் சிறப்பாக பவுலிங் செய்து தரமான யார்க்கர் ஒன்றை வீசினார் குகதாஸ் மதுலன். இந்த வீடியோ ட்ரெண்டாகிய நிலையில், சிஎஸ்கே அணி நிர்வாகம் உடனடியாக இவரை அணுகி, சென்னைக்கு அழைத்து வந்துள்ளது.
சென்னையில் தோனி தங்கியிருக்கும் அறைக்கு அருகிலேயே குகதாஸ் மதுலனுக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவரின் பவுலிங்கை தோனி பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், சிஎஸ்கே அணியின் நெட் பவுலராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக அடுத்த சீசனில் மலிங்கா ஸ்டைலில் இரட்டை தாக்குதலை சிஎஸ்கே அணி செய்யும் என்று பார்க்கப்படுகிறது.