கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரசிகர் ஒருவர் போட்டியின் இடையே போட்டிக்கான பந்தை எடுத்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேற முயன்றார். அதை பார்த்த மைதான பாதுகாவலர் பதறி அடித்து ஓடி சென்று அந்த ரசிகரிடம் இருந்து பந்தை வாங்கி மைதானத்துக்குள் வீசினார்.
அந்த ரசிகரால் போட்டியில் கால தாமதம் ஏற்பட்டு இருக்கும். ஆனால், பாதுகாவலர் அவரை கையும் களவுமாக பிடித்ததால் அது தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. பலரும் அந்த ரசிகரை கிண்டல் செய்து வருகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியின் போது சிக்ஸ் அடிக்கப்பட்ட பந்து ரசிகர்கள் மத்தியில் வந்து விழுந்தது. அப்போது ஒரு ரசிகர் அந்த பந்தை எடுத்து தனது பேன்ட்டுக்குள், உள்ளாடைக்குள் வைத்துக் கொண்டார். அத்துடன் ரகசியமாக மைதானத்தை விட்டு வெளியேற முயன்றார்.
ஆனால் அதை அருகில் இருந்த மற்ற ரசிகர்கள் பார்த்து கூச்சலிட்டனர். பாதுகாவலர்களிடம் அது குறித்து கூறினர். உடனே இரண்டு பாதுகாவலர்கள் பதறி அடித்து ஓடி வந்தனர். அதில் ஒருவர் கடும் கோபத்துடன் அந்த ரசிகரை மிரட்டி பந்தை கொடுக்குமாறு கூறினார். அந்த ரசிகர் பேன்ட்டுக்குள் ஒளித்து வைத்திருந்த பந்தை எடுத்து கொடுத்தார். இதை எடுத்து பாதுகாவலர் அந்த பந்தை மைதானத்திற்குள் வீசினார். பின்னர் அந்த ரசிகரை மைதானத்தை விட்டு வெளியேறுமாறு கூறியதோடு, அவரை வெளியே தள்ளினார்.
ஒருவேளை அந்த ரசிகர் பந்தை எடுத்துச் சென்றிருந்தால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டு இருக்கும். வேறு புதிய பந்தை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பலரும் அந்த ரசிகரை கிண்டல் செய்து வருகின்றனர். சிலர் அந்த பாதுகாவலர் அந்த ரசிகரை மோசமாக நடத்தியதாக கூறி வருகின்றனர்.