மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பவுலர்களுக்கு சாதகமான விதி ஒன்றை கொண்டுவர பிசிசிஐ ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஐபிஎல் தொடரில் தற்போது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான விதி தான் இருக்கிறது.
குறிப்பாக இம்பேக்ட் வீரர் விதியால் அனைத்து அணிகளும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன்களை கொண்டு வந்து விளையாடுகிறார்கள். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரிலே இரண்டு முறை 260 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் பவுலர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். கிரிக்கெட்டில் எப்போதுமே பேட்டிங்கிற்கும், பவுலிங்கிற்கும் ஒரு சமமான போட்டி இருந்தால் மட்டுமே ரசிகர்களுக்கு அது சுவாரசியத்தை கொடுக்கும். ஆனால் நடப்பு ஐபிஎல் சீசனில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 260 ரன்களுக்கு மேல் அடிப்பதும் அதனை சேஸிங் செய்யும் அணி அந்த ஸ்கோர் பக்கம் வரை வராமல் தோற்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இது முதலில் ரசிகர்களுக்கு ஆர்வத்தை கொடுத்தாலும் தொடர்ந்து இதே போல் நடைபெற்று வருவது ரசிகர்களுக்கு அலுப்பை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவுலர்களின் நலனுக்காக ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்கள் கொண்டு வந்தாலும் அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையில் இம்பேக்ட் வீரர் விதி போல் பவுலர்களுக்கும் ஒரு சாதகமான விதியை கொண்டு வர பிசிசிஐ முயற்சித்து வருகிறது. அதன்படி தற்போது ஒவ்வொரு பவுலர்களும் அதிகபட்சமாக நான்கு ஓவர்கள் மட்டுமே வீச முடியும். இந்த நிலையில் புதிய விதிப்படி ஏதேனும் ஒரு பவுலருக்கு மட்டும் ஐந்து ஓவர்களை வழங்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சிஎஸ்கே அணியை எடுத்துக் கொண்டால் பதிரானா சிறப்பாக பந்து வீசுவார். ஆனால் அவருக்கு நான்கு ஓவர் தான் கொடுக்க முடியும். இதே போல் பும்ரா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக பந்து வீசினாலும் நான்கு ஓவர்தான் வீச முடியும். இந்த நிலையில் கூடுதலாக ஒரு பவுலருக்கு ஐந்தாவது ஓவர் கொடுத்தால் நிச்சயம் ஒவ்வொரு அணியும் இதன் மூலம் பலனடையும்.
இம்பேக்ட் விதி மூலம் பேட்டிங் பலம் அடைந்து வரும் நிலையில் பௌலர்களுக்கும் இது போன்ற விதியை கொடுத்தால் தான் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதே போன்று இம்பேக்ட் விதியில் ஒரு வீரருக்கு பதில் எந்த வீரரை வேண்டுமானாலும் மாற்றலாம் என்று விதி இருக்கிறது.
அதனை மாற்றி பவுலருக்கு பதில் பேட்ஸ்மேன் என்ற விதியை கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. எனினும் இந்த இரண்டு விதியும் நடப்பு ஐபிஎல் தொடரில் அமலாக வாய்ப்பில்லை. ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் இந்த இரண்டு விதிகளும் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்பேக்ட் வீரர் விதி மாற்றம் கொண்டு வந்தால் அது சிஎஸ்கே உள்ளிட்ட அனைத்து அணிகளுக்குமே பிரச்சனையை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.