மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால், போட்டியின் போது கேப்டன் ஹர்திக் பாண்டியாவை புறக்கணித்து ரோஹித் சர்மாவிடம் ஆலோசனை கேட்டார். இந்த நிலையில், அவரை அடுத்த போட்டியில் அணியில் இருந்து நீக்கி இருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்.
அதன் பின்னணி குறித்து வட இந்திய ஊடகங்கள் மற்றும் ரோஹித் சர்மா ரசிகர்கள் பல்வேறு தகவல்களை இணையத்தில் பரப்பி வருகின்றனர். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது 11 ரன்கள் எடுத்தால் பஞ்சாப் அணி வெற்றி பெறும் என்ற நிலையில் கடைசி ஓவரை வீசினார் ஆகாஷ் மத்வால்.

அந்த ஓவரை வீசும் முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் சர்மா ஃபீல்டிங் நிறுத்துவது குறித்து ஆகாஷிடம் பேசினர். அப்போது கேப்டன் ஹர்திக் பாண்டியா சொல்வதை கேட்காமல் ரோஹித் சர்மா என்ன சொல்கிறார் என கூர்ந்து கவனித்தார் ஆகாஷ் மத்வால். பின்னர் கடைசி ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து பஞ்சாப் அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தி மும்பை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் ஆகாஷ் மத்வால்.
அடுத்து நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஆகாஷ் மத்வால் அணியில் இருந்தே நீக்கப்பட்டார். இதை அடுத்து ஆகாஷ் மத்வால் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை கண்டு கொள்ளாமல் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவையே தனது கேப்டனாக பார்த்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என ரோஹித் சர்மா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவைத் தவிர சரியான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் ஆகாஷ் மத்வால் சராசரியாக செயல்பட்டாலும் முக்கிய நேரங்களில் அணிக்கு கை கொடுத்து வந்தார். அவரை நீக்கிய நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.