துபாய்: இண்டர்நேஷனல் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் நவீன் உல் ஹக்கிற்கு 20 மாதங்கள் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு டி20 லீக் தொடர் நடத்தினால் கூட ஆஃப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த வீரர்கள் விளையாட தயாராகி வருவார்கள். அந்த வகையில் ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான நவீன் உல் ஹக் பல்வேறு லீக் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தொடரின் போது விராட் கோலியுடன் நவீன் உல் ஹக் மோதலில் ஈடுபட்டது அவரை மிகப்பெரிய பிரபலமாக மாற்றியது. அவர் எந்த மைதானத்தில் விளையாடினாலும் விராட் கோலியின் பெயரை சொல்லி ரசிகர்கள் சேட்டை கொடுத்தனர். இருப்பினும் உலகக்கோப்பை தொடரின் போது விராட் கோலி - நவீன் உல் ஹக் நட்புடன் கட்டியணைத்து பிரச்சனையை முடித்தனர்.
இதன்பின் நவீன் உல் ஹக்கின் சிறந்த பந்துவீச்சிற்கு விராட் கோலி ரசிகர்களே பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் நவீன் உல் ஹக் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வந்த இண்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்காக முதல் சீசனில் ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடினார். இந்த நிலையில் 2வது சீசனுக்கான ஒப்பந்தத்தை நீட்டித்து நவீன் உல் ஹக்கிடம் ஷார்ஜா வாரியர்ஸ் அணி கையெழுத்து கோரியுள்ளது.
ஆனால் நவீன் உல் ஹக் ஒப்பந்தம் நீட்டிப்பு செய்வதற்கு மறுப்பு தெரிவித்து கையெழுத்து போட மறுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஐஎல்டி20 லீக் நிர்வாகத்திடம் ஷார்ஜா வாரியர்ஸ் அணி புகாரளித்தது. இதன்பின் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைக்க ஒருவர் நியமனம் செய்யப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் பேச்சுவார்த்தை கடைசி வரை சுமூகமாக முடிவடையவில்லை. இதன்பின் விவகாரத்தை ஐஎல்டி20 லீக் நிர்வாகமே கையில் எடுத்தது. அந்த நிர்வாகிகள் முன்னிலையில் ஷார்ஜா வாரியஸ் அணி நிர்வாகமும், நவீன் உல் ஹக்கும் ஆஜாராகி தனித்தனியே தங்களது விளக்கத்தை அளித்தனர். இந்த நிலையில் விளக்கத்தை ஆராய்ந்து, ஐஎல்டி20 லீக் நிர்வாகம், நவீன் உல் ஹக் ஐஎல்டி20 லீக்கில் விளையாட 20 மாதங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.