மும்பை : இந்திய அணிக்காக அறிமுகமான பின் தன்னை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை வானளவு உயர்ந்துவிட்டதாக இளம் வீரர் சர்பராஸ் கான் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரராக உயர்ந்துள்ளார் சர்பராஸ் கான். இங்கிலாந்து அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்கள் உட்பட மொத்தமாக 200 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலம் இந்திய ரசிகர்களின் நம்பிக்கையையும் சர்பராஸ் கான் பெற்றுள்ளார்.

ஸ்பின்னர்களை எளிதாக விளாசும் திறமையை கொண்டுள்ள சர்பராஸ் கான், சொந்த மண்ணில் நிச்சயம் சிறப்பாக செயல்பட கூடியவராக பார்க்கப்படுகிறார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் சர்பராஸ் கானை இதுவரை எந்த அணியும் ஒப்பந்தம் செய்யவில்லை. இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெல் இருவரும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் சர்பராஸ் கான் பேசுகையில், ஐபிஎல் போன்ற நீண்ட தொடர்களில் வீரர்கள் காயமடைய வாய்ப்புகள் உள்ளது. அதனால் எனக்கு அழைப்புகள் வரலாம் என்று நினைக்கிறேன். ஆனால் எனது கைகளில் பயிற்சியை தொடர்ந்து செய்வதும், எனது டெக்னிக்கில் முன்னேற்றமடைவதும் உள்ளது. தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். இப்போது வரை எந்த ஐபிஎல் அணியிலும் நான் இல்லை. ஒருவேளை அழைப்பு வந்தால், நான் தயாராக இருக்க வேண்டும்.
வீட்டில் இருந்தவாறு எனது டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியையும் தொடர வேண்டும். என் சிறு வயதில் இருந்து தந்தையின் வார்த்தைகள் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை அறிந்து வைத்துள்ளேன். அவ்வளவு கதைகளை என் தந்தை சிறுவயதில் இருந்து கூறி கொண்டே வந்திருக்கிறார். அதன் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் பற்றி பேசி இருக்கிறார். இந்திய அணிக்காக அறிமுகமான போது நிச்சயம் பிரஷர் இல்லை என்று சொல்ல மாட்டேன்.
நிச்சயம் களமிறங்கும் போது அதிக பிரஷருடன் இருந்தேன். அந்த பிரஷரில் ரன்களை வேகமாக சேர்த்ததன் மூலம் கட்டுப்படுத்தி வெளி வர முடிந்தது. அதேபோல் இந்திய அணிக்காக அறிமுகமான பின் என்ன மாற்றம் நடந்தது என்று பலரும் கேட்கிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில் எனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களின் எண்ணிக்கை 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை இருந்தது. இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பின், என்னை பின் தொடர்வோரின் எண்ணில்லை 1.6 மில்லியனாக உள்ளது என்று கூறியுள்ளார்.