சென்னை : சிஎஸ்கே அணியின் நட்சத்திர தொடக்க வீரர் கான்வே காயம் காரணமாக முதல் பாதி ஐபிஎல் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படும் நிலையில், யார் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டி என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் மார்ச் 1ஆம் தேதியே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளெம்மிங் இன்னும் வரவில்லை என்றாலும் ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சஹர், ஹங்கர்கேகர் உள்ளிட்டோர் சிஎஸ்கே பயிற்சி முகாமில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு இடியாக ஒரு செய்தி வந்துள்ளது. சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் கான்வே காயம் காரணமாக மே மாதம் வரை விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது கான்வேவின் விரலில் காயம் ஏற்பட்டது. அவரால் பேட்டை கூட பிடித்து தூக்க முடியாத சூழலில், ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இப்போது இடதுகை கட்டை விரலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், 8 வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டிய நிலை கான்வே-வுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி தரப்பில் நியூசிலாந்து அணியின் இளம் வீரரான ரச்சின் ரவீந்திரா ரூ.1.8 கோடிக்கு வாங்கப்பட்டார். இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் ஸ்பின்னரான ரச்சின் ரவீந்திரா, உலகக்கோப்பை தொடரின் போதே இந்திய ரசிகர்களின் நம்பிக்கையை பெற்றார்.
இதனால் கான்வே இடத்தில் ரச்சின் ரவீந்திரா களமிறங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ரச்சின் ரவீந்திரா நல்ல ஃபார்மில் இருப்பதால், முதல் போட்டியிலேயே ரச்சினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும் தொடக்க வீரராக ரஹானேவும் களமிறங்குவார் என்பதால், தோனியின் முடிவு என்னவாக இருக்கும் என்றும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.