டெல்லி: ஐஎல் டி20 லீக் தொடரில் விளையாடி வரும் டெல்லி அணி நிர்வாகத்திற்கு சொந்தமான துபாய் கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டிக்காக டேவிட் வார்னர் தீவிரமாக தயாராகி வந்தார்.

இவருக்கு ஃபேர்வெல் கொடுப்பதற்காக ரசிகர்களும் தயாராகி வந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் திடீரென ஓய்வை அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டேவிட் வார்னர் பேசுகையில், உலகம் முழுவதும் நடக்கும் டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்காக ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார்.
இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்தால், நிச்சயம் கம்பேக் கொடுக்க தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார். டி20 லீக் தொடரில் விளையாடுவதற்காக ஏற்கனவே டி காக் ஓய்வை அறிவித்த நிலையில், தற்போது டேவிட் வார்னரும் ஓய்வு பெற்றுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பணத்திற்காக தேசிய அணியில் விளையாடுவதை தவிர்க்கலாமா என்ற ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
37 வயதாகும் டேவிட் வார்னர், இன்னும் 3 ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாட முடியும். அதனால் குடும்பத்தினருக்காக பணம் சேர்க்க அவர் ஓய்வு பெறலாம் என்று எடுத்த முடிவு சரியானதாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்த சில நிமிடங்களில் டெல்லி அணி நிர்வாகம் அவருக்கு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வரும் ஐஎல்டி20 லீக் தொடரில் துபாய் கேப்பிடல்ஸ் என்ற அணியை வாங்கியுள்ளது. இந்த அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐஎல்ட்20 லீக் தொடரில் துபாய் கேப்பிடல்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது.
இந்த நிலையில் நடப்பாண்டுக்கான ஐஎல்டி20 சீசன் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக டேவிட் வார்னர் அமைந்தார். இதனால் டெல்லி அணியின் முடிவு அந்த அணிக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது.