மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு சீசனும் ரசிகர்களுக்கு பெரிய அளவில் பொழுதுபோக்கை தந்து கொண்டே வருகிறது. ஐபிஎல் 2023 தான் சிறந்த சீசன் என்று நாம் நினைத்தால் அடுத்த சீசன் அதையும் மிஞ்சும் அளவுக்கு நடைபெறுகிறது.
இதனால் உலகத்தில் உள்ள பல கிரிக்கெட் வீரர்களும், ஐபிஎல் தொடர் தான் இருப்பதிலேயே மிகவும் கடினமான தொடர் என்று பாராட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் ஏதேனும் ஒரு அணிக்கு சில குறைகள் இருக்கும். அவர்கள் மற்ற அணியுடன் தோற்பார்கள். இதனால் அந்த அணியை அடிமை அணி என்று ரசிகர்கள் அழைப்பார்கள். ஒவ்வொரு சீசனிலும் இப்படி ஒரு அடிமை அணி சிக்கிக் கொள்ளும்.

அந்த அணியை போற வர அணிகள் எல்லாம் தோற்கடிக்கும். ஆனால் இம்முறை அப்படி எந்த ஒரு அணியும் இதுவரை தென்படவில்லை என்பதுதான் சுவாரசியமான விஷயமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கடைசி இடத்தில் இருக்கும் அணி, எப்போதும் பலம் குன்றிய அணியாக தான் இருக்கும். ஆனால் இம்முறை கடைசியில் இருப்பது ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி.
மும்பை இந்தியன்ஸ் அணியும் பலமுடன் தான் இருக்கிறது. அவர்கள் எப்போது திடீரென்று சீறிப்பாய்வார்கள் என்று யாராலும் கணிக்க முடியாது. மேலும் சூரியகுமார் யாதவ் அணிக்கு திரும்பினால், மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் மேலும் அதிகரிக்கும். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. இப்படி பத்து அணிகளுமே நல்ல பலத்துடன் இருப்பதால் இம்முறை யார் வெற்றி பெறுவார் என்று சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆல்ரவுண்டர் மற்றும் சிஎஸ்கே வீரருமான ஆல்பி மார்க்கல், நடப்பு ஐபிஎல் தொடர் கடும் சவால்களை அனைத்து அணிகளுக்கும் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மற்ற சீசன்களை விட இம்முறை அனைத்து அணிகளுமே அபாயகரமான அணியாக விளங்குகிறது. இதன் காரணமாக இந்த தொடர் பல சவால்களை கொடுக்கும்.
அது மட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் ஒரு கம்பேக்கை கொடுப்பார்கள்.இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்வார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார். ஆல்பி மார்க்கலின் இந்த கருத்தை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி அதிகளவு ஷேர் செய்து வருகின்றனர்.