ஹைதராபாத் : கடைசியாக ஆடிய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். அந்த தோல்விக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் மோசமான கேப்டன்சி தான் காரணம் என முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு பேசியதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
அது மட்டுமின்றி ஹிந்தி வர்ணனையாளர் நவ்ஜோத் சிங் சித்து, சிஎஸ்கே வெற்றிகளுக்கு தோனி தான் காரணம் என கூறுகிறோம். அப்படி என்றால் சிஎஸ்கே அணியின் தோல்விகளுக்கும் தோனி தான் காரணம் என காட்டமாக பேசி இருந்தார். சிலர் சித்து கூறிய அந்த வார்த்தைகளை அம்பத்தி ராயுடு கூறியது போல மாற்றி சமூக ஊடகங்களில் தவறாக செய்தி பரப்பி வந்தனர்.

சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, சிஎஸ்கே அணியை பற்றியும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தோனி ஆகியோரை பற்றி மோசமாக பேசுகிறாரா? என சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த தவறான செய்திகள் குறித்து அம்பத்தி ராயுடு விளக்கம் அளித்து இருக்கிறார்.
தனது விளக்கத்தில் குறிப்பிட்ட அந்த போட்டியின் போது தான் வர்ணனை செய்யவே இல்லை என்று கூறி இருக்கிறார் அம்பத்தி ராயுடு. அப்போது தனது பண்ணையில் மாம்பழம் பறித்துக் கொண்டு இருந்ததாகவும், இது போன்ற செய்திகளை எழுதும் போது பொறுப்புடன் நடந்து கொள்ளவும் கூறி இருக்கிறார். மேலும், முட்டாள்தனமான இந்த தகவலை பரப்ப வேண்டாம் என்றும் கோபமாக குறிப்பிட்டு இருக்கிறார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருந்தது. அதனை அடுத்தே கடும் விமர்சனங்கள் எழுந்தன. தற்போது சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் ஆடி அதில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று இருக்கிறது. இனி ஆறு லீக் போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்றால் மட்டுமே சிஎஸ்கே அணியால் பிளே-ஆஃப் பற்றி நினைக்க முடியும்.