சென்னை : 17வது சீசனுக்கான ஐபிஎல் தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மகன் அமீன் இருவரும் இணைந்து ”நீ சிங்கம் தான்” பாடி சேப்பாக்கம் மைதானத்தின் சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கவுள்ள நிலையில், தோனி என்ன ரோலில் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான தொடக்க விழாவிற்கும் சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை காண்பதற்கான சென்னை அணி ரசிகர்கள் 4.30 மணி முதலே சேப்பாக்கம் மைதானத்தில் குவிய தொடங்கினார்கள். அத்தனை ரசிகர்கள் தோனியின் நம்பர் 7 ஜெர்சியை அணிந்து வந்திருந்ததால், சேப்பாக்கம் மைதானமே மஞ்சள் கடல் போல் காட்சியளித்தது.
பின்னர் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் இருவரின் நடன நிகழ்ச்சியுடன் தொடக்க விழா தொடங்கியது. இவர்கள் இருவரும் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாட, சென்னை ரசிகர்கள் கொஞ்சம் அமைதி காத்தனர். பின்னர் பவுண்டரி லைனில் அக்ஷய் மற்றும் டைகர் இருவரும் பைக்கில் ஒரு ரவுண்ட் வர, அப்போது தான் ரசிகர்கள் ஒரு வைப்பிற்கு வந்தனர்.
பின்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பாடகர் சோனு நிகம் இருவரும் மேடைக்கு வந்து இசை நிகழ்ச்சியை தொடங்கினார்கள். சோனு நிகம் உள்ளே வந்ததும் வந்தே மாதரம் பாடலை தொடங்க, தொடர்ந்து வந்த ஏ.ஆர்.ரஹ்மானும் தாய் மண்ணே வணக்கம் பாடலையே இந்தியில் பாடினார். பின்னர் உடனடியாக ஏ.ஆர்.ரஹ்மான் சிவாஜி படத்தில் இடம்பெற்ற ”பல்லேலக்கா”வை பாடி அசத்தினார்.
இதன்பின் டெல்லி படத்தின் ”மசக்களி” பாடலை சேப்பாக்கம் மைதானே அதிர்ந்தது. தொடர்ந்து ஸ்வேதா மோகன் மற்றும் நித்யா மோகன் இருவரும் ”நன்னாரே” பாடலை பாட, பின்னர் தான் சிஎஸ்கே ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த ”நீ சிங்கம் தான்” பாடலை ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் பாடிய படி மேடைக்கு வந்தார். அப்போது நீ சிங்கம் தான் என்று பாடிய போது ஒட்டுமொத்த சேப்பாக்கம் மைதானமும் ஒன்றாக பாட தொடங்கியது.
அவருடன் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து கொள்ள, கேமராவும் சிஎஸ்கே அணி பக்கம் திரும்பியது. பின்னர் உயிரே படத்தின் என்னுயிரே, ஆயுத எழுத்து படத்தில் இடம்பெற்ற ”ஜன கன மன” பாடலை தமிழில் பாடினார்கள். தொடர்ந்து சையா சையா, ஜெய் ஹோ உள்ளிட்ட பாடல்களை உணர்ச்சி பொங்க ஏ.ஆர்.ரஹ்மான் பாடி அசத்தினார். இதனை சிஎஸ்கே அணி ரசிகர்கள் அனைவரும் பிரம்மிப்புடன் பார்த்து உற்சாகமடைந்தனர்.