சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் தொடக்க விழாவில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. இதற்காக சிஎஸ்கே அணி தரப்பில் மார்ச் முதல் வாரத்தில் இருந்தே பயிற்சி முகாம் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் ஐபிஎல் தொடருக்கான தொடக்க விழாவையும் சென்னையில் நடத்த உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதனால் ஐபிஎல் தொடரின் அறிமுக விழாவில் பங்கேற்க 10 அணிகளின் கேப்டன்களும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் பிரீமியர் லீக் தொடரை போல் பாலிவுட் நட்சத்திரங்களை அழைக்க ஐபிஎல் நிர்வாக குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான தொடக்க விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சி செய்ய உள்ள நட்சத்திரங்களின் பட்டியலில் வெளியாகியுள்ளது. கடந்த முறை பாடகர் அர்ஜித் சிங் பங்கேற்று குஜராத் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு அழைத்து சென்றார். அதேபோல் இம்முறை சேப்பாக்கம் என்பதால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தோனி ஒரு பக்கம் இருக்க, ”நீ சிங்கம் தான்” பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை பாடினால் எப்படி இருக்கும் என்று கற்பனைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். அதேபோல் பாடகர் சோனு நிகமும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து இசை கச்சேரியில் பாடவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதேபோல் பாலிவுட்டின் பிரபல நடிகர்களான டைகர் ஷெராஃப் மற்றும் அக்ஷய் குமார் இருவரும் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் பாலிவுட்டின் பிரபல நடிகைகள் சார்பாக நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தொடக்க விழாவை நேரில் காண்பதற்கான டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.