மும்பை: ஐபிஎல் தொடரில் 2022ஆம் ஆண்டு 2 புதிய அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் குஜராத் அணியை சிவிசி கேபிட்டல்ஸ் அணியும், லக்னோ அணியை ஆர்பிஎஸ்ஜி நிறுவன உரிமையாளர் சஞ்சீவ் கொயங்காவும் பெரும் தொகை கொடுத்து வாங்கினர். அதில் குஜராத் அணி ரூ.5,625 கோடிக்கு வாங்கப்பட்டது.
முதல் சீசனிலேயே ஹர்திக் பாண்டியா தலைமையில் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், 2வது சீசனில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. பின்னர் 3வது சீசனில் சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். புதிய அணிக்கான ஏலத்தின் போது இந்தியாவின் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானியும் பங்கேற்றிருந்தார்.

ஐபிஎல் தொடரில் அணியை வாங்க முடியவில்லை என்றாலும், மகளிர் பிரிமியர் லீக் தொடரில் அகமதாபாத் அணியை ரூ.1,289 கோடிக்கு வாங்கினார். இந்த நிலையில் கவுதம் அதானியின் கண் ஐபிஎல் அணியின் பக்கம் திரும்பியுள்ளது. அதன்படி குஜராத் அணியின் உரிமையை கொண்டுள்ள சிவிசி நிறுவனத்திடம் அந்த அணியின் அதிக பங்குகளை வாங்க அதானி மற்றும் டோரண்ட் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
தற்போது குஜராத் அணியின் மதிப்பு ரூ. 1,300 கோடிக்கும் அதிகமாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு ஐபிஎல் அணியை வாங்கும் போது, அந்த அணியின் மூலமாக லாபம் ஈட்டுவதற்கு 4 முதல் 5 ஆண்டுகள் வரை காலம் பிடிக்கும். ஏனென்றால் ஒளிபரப்பு உரிமை, விளம்பர உரிமை, டிக்கெட் விற்பனை உள்ளிட்டவற்றின் மூலமாக குறைந்தபட்சம் ஒவ்வொரு அணியும் ஆண்டுக்கு ரூ.700 கோடி வரை லாபம் ஈட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே குஜராத் அணியின் தங்களின் பெரும்பான்மை பங்குகளை விற்க தயாராகி வருகிறது. இதனையறிந்து அதானி மற்றும் டோரண்ட் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அணியின் பங்குகளை விற்பனை செய்ய பிப்ரவரி மாதம் வரை அனுமதி கிடையாது. அதன்பின் இந்த ஒப்பந்தம் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மகளிர் பிரிமியர் லீக் தொடரில் அதானி, அம்பானி அணிகள் விளையாடி வரும் சூழலில், விரைவில் ஐபிஎல் தொடரில் அதானியும் அம்பானியும் மோதி கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குஜராத் அணியை வாங்குவதற்காக 2022ஆம் ஆண்டிலேயே அதானி ரூ.5,100 கோடி வரை ஏலம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.