சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க வருமாறு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கிற்கு பிசிசிஐ அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அவர் அந்த அழைப்பை நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து பிசிசிஐ கவுதம் கம்பீரிடம் சரணடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 2024 டி20 உலக கோப்பை தொடருடன் விடை பெற இருக்கும் நிலையில் அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்து இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி உலகிலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட அணியாக உள்ளது. எனவே, இந்திய அணியின் பயிற்சியாளர் என்பவர், வெறும் பயிற்சியாளராக மட்டுமில்லாமல் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்ட வீரர்களை கையாளும் பக்குவத்தையும் பெற்றிருக்க வேண்டும். அதே சமயம் அடுத்த தலைமுறை வீரர்களை வளர்க்கும் திறனும் இருக்க வேண்டும். அதே சமயம் தொடர்ந்து வெற்றிகளையும் குவிக்க வேண்டும்.
இதை சாதாரண பயிற்சியாளர்களால் செய்ய முடியாது. மிகப் பெரும் அனுபவமும், திறமையும் கொண்ட, பெரிய அணிகளை வழிநடத்திய அனுபவம் கொண்ட பயிற்சியாளர்களால் மட்டுமே இதை செய்ய முடியும். இந்த நிலையில் தான் யார் வேண்டுமானாலும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் அளிக்கலாம் என்றாலும், திரை மறைவில் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கை தொடர்பு கொண்டது பிசிசிஐ.
சிஎஸ்கே அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பை பெற்றுக் கொடுத்த வெற்றிகரமான பயிற்சியாளர் என்பதால் அவருக்கு அழைப்பு விடுத்தது பிசிசிஐ. ஆனால், ஸ்டீபன் பிளெம்மிங் சிஎஸ்கே அணியை விட்டு வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக சிறப்பாக செயல்பட்டு வரும் கவுதம் கம்பீரை இந்திய அணியின் பயிற்சியாளராக வருமாறு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கவுதம் கம்பீர் கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தார். அந்த இரண்டு ஆண்டுகளிலும் அந்த அணி பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறியது. இந்த ஆண்டு கொல்கத்தா அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து சென்றதோடு, புள்ளி பட்டியலிலும் முதல் இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். கொல்கத்தா அணி இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லவும் வாய்ப்பு உள்ளது.
அது மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இரண்டு முறை கோப்பை வென்று கொடுத்தவர். மேலும், இந்திய அணியின் 2007 டி20 உலக கோப்பை வெற்றி மற்றும் 2011 ஒருநாள் போட்டி உலக கோப்பை வெற்றிகளில் கவுதம் கம்பீரின் பங்கும் அதிகம். இந்த நிலையில் தான் அவருக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.