சென்னை : ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றிருக்கும் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தங்களது நாட்டைச் சேர்ந்த வீரர்களை அணிக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருவதாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் மினி ஏலத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் இருக்கும் அணியில் தங்களது சொந்த நாட்டு வீரர்களை அணியில் சேர்க்க ஆர்வம் காட்டி வந்தனர். குறிப்பாக சிஎஸ்கே அணியில் நியூசிலாந்தை சேர்ந்த பிளமிங் தான் பயிற்சியாளராக இருக்கிறார்.

ஏலம் மூலம் அவர் நான்கு நியூசிலாந்து வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து விட்டார். இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் இலங்கையை சேர்ந்த ஜெயவர்த்தனே, இலங்கை வீரர்களை மும்பை அணிக்குள் கொண்டு வர ஆர்வம் காட்டினார். இதேபோன்று ஆஸ்திரேலிய வீரர்கள் இங்கிலாந்து வீரர்கள் என ஒவ்வொரு அணியும் அதிக வீரர்களை ஏலத்தில் எடுத்திருக்கிறது.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள அஸ்வின் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் ஐபிஎல் அணிகளில் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய நாட்டை சேர்ந்த வீரர்களை எப்படியாவது ஏலத்தில் எடுக்க சொல்லி தங்களது அணிக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். நான் இதை யார் செய்கிறார் என்று வெளிப்படையாக சொல்லி சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை.
ஆனால் இது மிகவும் தவறான ஒரு முன்னுதாரணமாகும். இது இந்தியன் பிரீமியர் லீக் ஆனால் 8 வெளிநாட்டு வீரர்களை ஒவ்வொரு அணியும் தேர்வு செய்கிறார்கள். அதில் ஒரே நாட்டை சேர்ந்த பலர் இடம்பெறுகிறார்கள். நான்கு வெளிநாட்டு வீரர்கள் தான் இருக்க முடியும். இதனால் கூடுதலாக நான்கு வெளிநாட்டு வீரர்கள் அணியில் சும்மாவே உட்கார்ந்து இருக்கிறார்கள்.
அந்த தருணத்தில் இந்திய ஆடுகளங்கள் எவ்வாறு இருக்கிறது. இந்திய வீரர்களின் குறை, நிறை என்ன என்பது குறித்து எல்லாம் அவர்கள் நன்றாக கற்றுக் கொண்டு செல்கிறார்கள். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கையை 8-லிருந்து நான்காக குறைக்க வேண்டும். வெளிநாட்டு பயிற்சியாளர்களும் தங்களுக்கு வேண்டியவர்களை அணியில் சேர்க்கக்கூடாது என்று அஸ்வின் சாடி இருக்கிறார்.