கொல்கத்தா : பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டதால் எந்த பாதிப்பும் அவருக்கு இல்லை என்று கேகேஆர் அணியின் பயிற்சியாளர் சந்திரகாண்ட் பண்டிட் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் இருந்து இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 மாதங்களில் இந்திய அணிக்காக 4 டெஸ்ட், 14 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடிய வீரரான ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒப்பந்தம் அளிக்கப்படாதது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

இதற்கு தேர்வு குழு மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவின் பரிந்துரை காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட காரணமாக பார்க்கப்படுகிறது. ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாமல் காயம் என்று பொய் கூறிவிட்டு கேகேஆர் அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்றார் ஸ்ரேயாஸ் ஐயர். இந்த விவகாரம் வெளி வந்ததால், ஸ்ரேயாஸ் ஐயர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்காக விளையாடாத நேரங்களில் வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலமாக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாததன் காரணமாகவே ஸ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது வெளிப்படையாக தெரிய வந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக கேகேஆர் அணியின் பயிற்சியாளர் சந்திரகாண்ட் பண்டி பேசுகையில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒப்பந்தம் வழங்கி இருக்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் அவரால் இந்திய அணிக்காக அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக செயல்பட முடியும். அவருக்கு காயம் ஏற்பட்டு, பின்னர் குணமடைந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் விளாசி இருக்கிறார். நிச்சயம் வரும் காலங்களில் ஏதாவது ஒரு வீரர் ஃபார்மை இழப்பார்.
அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவார். அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரில் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார். இந்திய அணிக்கு பயனுள்ள வீரராக இருப்பார் என்று நம்புகிறேன். அவர் பிசிசிஐ ஒப்பந்தத்தில் சேர்க்கப்படாதது கொஞ்சம் ஆச்சரியம் தான். அதற்கான காரணம் குறித்து முழுமையாக தெரியவில்லை. ஆனால் இந்த விஷயமெல்லாம் ஸ்ரேயாஸ் ஐயரை பாதிக்காது. சிறப்பான கம்பேக்கை கொடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.