சென்னை : டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று வெளியான தகவல், அவரின் ஈகோவை தொட்டதாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த ஒரு வாரத்திற்குள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியை பிசிசிஐ கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய அணியே பெரும்பாலும் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் பேக் அப் வீரர்களாகவே தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனிடையே டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் விராட் கோலி தேர்வு செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகியது. லண்டனில் இருக்கும் விராட் கோலி, இந்தியா வந்த பின் அவருடன் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் கூறப்பட்டது.
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் கடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல காரணமே விராட் கோலி தான். உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் விராட் கோலியை வயது காரணமாக எப்படி நீக்க முடியும் என்று ரசிகர்களிடையே விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் நேற்றிரவு லண்டனில் இருந்து விராட் கோலி மும்பை வந்தார்.
விமான நிலையத்திலேயே ரசிகர்கள் பலரும் அவரை பார்த்து உற்சாகமடைந்தனர். இதனிடையே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு பற்றிய செய்தியால் விராட் கோலியின் ஈகோவை பிசிசிஐ தொட்டுவிட்டதாக கருதப்படுகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக அல்லாமல் நம்பர் 3 வரிசையில் விராட் கோலி களமிறங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விராட் கோலி நம்பர் 3 வரிசையில் களமிறங்கி வருகிறார். இதனால் ஆர்சிபி அணிக்காக சின்ன ட்ரெய்லர் ஒன்றை நம்பர் 3 வரிசையில் களமிறங்கி வெளுத்து கட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் விராட் கோலியின் பதிலடியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.