சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான்கு முக்கிய பந்துவீச்சாளர்கள் விளையாட முடியாத சூழ்நிலையில் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியிருக்கிறார். மதீஷா பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசூர் ரஹ்மான் மற்றும் தீபக் சாஹர் என சிஎஸ்கே அணியின் ஆணி வேராக இருக்கும் வேகப் பந்துவீச்சாளர்கள் நால்வரும் வெவ்வேறு காரணங்களால் ஆட முடியாத நிலையில் உள்ளதாக பிளெம்மிங் கூறி இருப்பது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களாக இருப்பது மதிஷா பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, தீபக் சாஹர் மற்றும் முஸ்தாபிசூர் ரஹ்மான். இவர்களில் முஸ்தாபிசூர் ரஹ்மானை தவிர்த்து மற்ற மூவரும் கடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடவில்லை. பதிரானா காயம் காரணமாக அந்த போட்டியில் பங்கேற்கவில்லை. துஷார் தேஷ்பாண்டே காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை. அடுத்து தீபக் சாஹர் அணியில் இடம் பெற்று இருந்த போதும் முதல் நான்கு பந்தை வீசிய பின் அவருக்கு காலில் வலி ஏற்பட்டதால் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அதன் பின் அவர் அந்தப் போட்டியில் பந்து வீசவில்லை.

இந்த நிலையில் மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. அப்போது எப்படியும் பதிரானா மற்றும் துஷார் தேஷ்பாண்டே அணிக்கு திரும்பி விடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் அது சந்தேகம்தான் என ஸ்டீபன் பிளெம்மிங் குண்டைத் தூக்கி வீசி இருக்கிறார். சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள இலங்கையை சேர்ந்த பதிரானா மற்றும் தீக்ஷனா பாஸ்போர்ட் வாங்குவதற்காக இலங்கைக்கு விரைந்துள்ளனர். அவர்கள் டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளதால் பாஸ்போர்ட் மற்றும் விசா நடைமுறைக்காக இலங்கைக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் சிஎஸ்கே அணியின் அடுத்த போட்டிக்கு முன்பாக அணிக்கு திரும்புவார்களா என்பது தெரியவில்லை. மேலும் துஷார் தேஷ்பாண்டே காய்ச்சலில் இருந்து குணமடைந்து விடுவாரா எனவும் உறுதியாக சொல்ல முடியவில்லை என ஸ்டீபன் பிளெம்மிங் கூறி இருக்கிறார். தீபக் சாஹருடைய காயத்தை பொறுத்தவரை அது குறித்து இன்னும் மருத்துவர்கள் அறிக்கை அளிக்கவில்லை என அவர் கூறினார். இவர்களைத் தவிர்த்து வங்கதேச வேகப்பந்துவீச்சாளரான முஸ்தாபிசூர் ரஹ்மான் கடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். அவரை வங்கதேச கிரிக்கெட் அமைப்பு மீண்டும் அழைத்துக் கொண்டது.
இவ்வாறாக முக்கிய பங்குவீச்சாளர்கள் இல்லாத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது சிஎஸ்கே அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ரிச்சர்ட் கிலீசன் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கிறார். கடந்த போட்டியில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர் சிறப்பாக பந்து வீசினார்.
அவரை தவிர்த்து சிஎஸ்கே அணியில் வேகப்பந்துச்சாளர்கள் யார் எனப் பார்த்தால் முகேஷ் சவுத்ரி மட்டுமே இருக்கிறார். அவர் இந்த சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அதிலும் அதிக ரன்கள் கொடுத்ததால் அவருக்கு அதன் பின் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இவர்கள் இருவரை தவிர்த்து பார்த்தால் ஆல்ரவுண்டரான சிவம் துபே மட்டுமே அணியில் வேகப்பந்துவீச்சாளராக இடம் பெற முடியும். இப்படி சிக்கலான நிலையில் சிஎஸ்கே அணி உள்ளது குறிப்பாக பதிரானா மற்றும் துஷார் தேஷ்பாண்டே இல்லாமல் சிஎஸ்கே அணி வெற்றி பெறுவது மிக மிக கடினம். அவர்களில் ஒருவராவது அடுத்து நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க வேண்டும்.